போதை பொருள் விவகாரத்தில் தவறாக பயன்படுத்தப்பட்ட தன் பெயர்..! ரகுல் ப்ரீத் சிங் உயர் நீதி மன்றத்தில் வழக்கு!
நடிகை ரகுல் ப்ரீத் சிங், போதை மருந்து விவகாரத்தில் ஊடகங்கள் தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தியதாக கூறி, டெல்லி உயர் நீதி மன்றத்தில் பரபரப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
மனஅழுத்தம் காரணமாக சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தி, சமீபத்தில் போதை பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்த போது, ரியா திரையுலகை சேர்ந்த இரு நடிகைகளுக்கும், இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக தெரிவித்ததாக கூறப்பட்டது.
அதாவது, பிரபல வாரிசு நடிகை சாரா அலிகான் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் பெயரை தான் ரியா கூறியதாக சமூக வலைத்தளம், மற்றும் ஊரகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இந்த செய்தியை காவல்துறையினர் மறுத்தனர்.
ரியாவிடம் விசாரணை செய்தபோது அவர் எந்த ஒரு நடிகர் நடிகைகளின் பெயரையும் கூறவில்லை என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் தன்னுடைய பெயரை ஊடகங்கள் தவறாக பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை ரகுல்பிரீத்தி சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இதில் அவர் கூறியுள்ளதாவது, செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் காட்டிய வழிமுறைகளின்படி ஊடகங்கள் செயல்படவில்லை என்று தன் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம், இந்த மனு குறித்து உடனடியாக விசாரணை செய்யுமாறு செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.