- Home
- Cinema
- ரஜினி - கமல் உடன் சண்டையா? திடீரென தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர் சி விலகல் - பின்னணி என்ன?
ரஜினி - கமல் உடன் சண்டையா? திடீரென தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர் சி விலகல் - பின்னணி என்ன?
கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருந்த தலைவர் 173 திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருந்த நிலையில், அப்படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சி திடீரென விலகி இருக்கிறார்.

Sundar C Quit Thalaivar 173 Movie
ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாகவும், அப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாகவும் கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அப்படத்தை வருகிற 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் அறிவித்து இருந்தனர். அப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து அதன் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. ஏனெனில் அருணாச்சலம் படத்திற்கு பின் சுமார் 28 ஆண்டுகள் கழித்து ரஜினியும், சுந்தர் சி-யும் இணையும் படம் என்பதால் அதற்கு ஹைப் இருந்தது.
சுந்தர் சி விலகல்
இந்த நிலையில் தற்போது அப்படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர் சி திடீரென அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், “திடீரென ஏற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இந்த முக்கியமான படத்திலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது எனது கனவு படங்களில் ஒன்று, ஆனால் வாழ்க்கையில் சில நேரங்களில் நம்மால் கனவுகளை விட நியதியை பின்பற்ற வேண்டிய தருணங்கள் வரும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி அறிக்கை
மேலும் அவர், “ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இரு சிறந்த நாயகர்களுடன் இணைந்த அனுபவங்கள், எடுத்துக்கொண்ட சில நாட்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் எனக்கு மிகவும் விலைமதிப்பில்லாதவை. அவர்களின் அறிவுரையும், ஊக்கமும் எனக்கு என்றும் வழிகாட்டியாக இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார். தனது ரசிகர்கள் மற்றும் நல விரும்பிகளிடம் மன்னிப்புக் கோரியிருந்த அவர், “இந்த செய்தி உங்களைக் கவலையடையச் செய்திருந்தால் மனமாறி மன்னிக்கவும். விரைவில் உங்களை மகிழ்விக்கப் புதிய முயற்சிகளில் ஈடுபடுவேன்,” என்று உறுதியளித்துள்ளார்.
சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள்
இப்படியாக, தலைவர் 173 படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிவித்துள்ளது, தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. அவர் விலகியதற்காக காரணம் என்ன என்பதை தெளிவாக கூறவில்லை. இதனால் கமல்ஹாசன் உடன் ஏதேனும் பிரச்சனையால் அப்படத்தில் இருந்து சுந்தர் சி விலகினாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கேள்வி எழுந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதையடுத்து விஷால் நடிக்க உள்ள படத்தையும் இயக்க உள்ளார்.