10-15 முறை பிரேக் அப்.. எப்ப பாத்தாலும் சண்டை.. அப்பறம் தான் புரிஞ்சுது.. அருண்ராஜா காமராஜ் உருக்கம்..
சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அருண்ராஜா காமராஜ் தனது மனைவி பற்றி உருக்கமாக பேசி உள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், பாடலாசிரிய, பாடகர் என பன்முக திறமை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தையும். லேபிள் என்ற வெப் சீரிஸையும் இயக்கி உள்ளார்.
Arun raja kamaraj
இவர் சிந்துஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கொரோனா தொற்று காலத்தில் இவரின் மனைவி கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அருண்ராஜா காமராஜ் தனது மனைவி பற்றி உருக்கமாக பேசி உள்ளார். அந்த பேட்டியில் பேசிய அவர் “ நான் பலரை ஒன் சைடாக காதலித்திருக்கிறேன். ஆனால் என்னை காதலித்த ஒரே பெண் என்றால் அது சிந்துஜா தான். எங்களுக்குள் 10, 15 பிரேக் அப் நடந்துள்ளது. பிரேக் அப் ஆகும் மீண்டும் சேருவோம். பின்னர் மீண்டும் பிரேக் அப் என பல முறை பிரிந்து சேர்ந்திருக்கிறோம்.
எங்களுக்குள் அடிதடி எல்லாம் நடந்துள்ளது. ஆனால் மீண்டும் சமாதானம் ஆகி பேசும் போது அப்படி ஒரு சண்டை நடந்தது என்ற அடையாளமே இல்லாமல் மிகவும் சகஜமாக பேசுவோம். அதன்பின்னர் ஒருக்கட்டத்தில் எத்தனை சண்டை வந்தாலும் ஒருவர் இல்லாம்ல் ஒருவர் இருக்க முடியாது என்று அப்போது தான் புரிந்தது.
arun raja kamaraj
காதலிக்கும் போதே அவ்வளவு சண்டைகள் என்றால், திருமணத்திற்கு பின் எவ்வளவு சண்டைகள் நடந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள். பின்னர் தான் எங்களுக்குள் ஏன் இவ்வளவு சண்டைகள் வருகிறது என்று புரிந்துக்கொண்டோம். எங்களுக்குள் இருந்த அதீத அன்பு மற்றும் அதிக எதிர்ப்பார்ப்பு தான் இந்த சண்டைகளுக்கு காரணம் என்று கொரோனா காலத்தில் தான் புரிந்து கொண்டோம். அந்த புரிதலுக்கு பிறகு, இது தெரியாமல் இவ்வளவு காலம் சண்டைப் போட்டு கொண்டே இருந்துவிட்டோமே என்றெலாம் பேசியிருக்கிறோம்.
arun raja kamaraj
எங்கள் வீட்டிற்கு எவ்வளவு செலவாகும், என்ன இருக்கிறது இல்லை என்று கூட எனக்கு தெரியாது. அனைத்தையும் அவர் தான் பார்த்துக்கொண்டார். கொரோனா காலத்தில் புரிதலுடன் அன்பாக வாழ்ந்து வந்தோம்.
இதனால் ஷூட்டிங் சென்ற போது கூட அவர் இல்லாமல் எனக்கு தூக்கம் வரவில்லை. எனவே அவரையும் ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்றேன்.. இதனிடையே அவர் இறந்துவிட்டார். அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு அவர் இல்லாமல் தான் சென்றேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.