ஆகம விதிகளை மீறி திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்றாரா விஜய்? வெடித்த புது சர்ச்சை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆகம விதிகளை மீறி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

Vijay Controversy
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வருகிற மே 4ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளன. இதனிடையே நடிகர் விஜய் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி நள்ளிரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு வந்து. அங்கிருந்து காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு கிளம்பி சென்றார். விஜய்க்கு வழிநெடுகிலும் ரசிகர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விஜய் திருச்செந்தூர் விஜயம்
இதையடுத்து நள்ளிரவில் திருச்செந்தூர் சென்ற விஜய், அங்கு அதிகாலை நடைபெற்ற விஷ்வரூப பூஜையில் கலந்துகொண்டு, கடவுளை தரிசித்தார். விஜய்க்கு கோவில் நிர்வாகம் சார்பில், வேல் பரிசாக வழங்கப்பட்டது. அந்த வேலோடு கோவில் அருகே உள்ள கடற்கரைக்கு சென்று வந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். விஜய்யின் வருகையால் திருச்செந்தூர் ஸ்தம்பித்துப் போனது. அதிகாலையில் அதிகளவிலான பக்தர்கள் கோவிலில் கூடி இருந்தனர்.
வெடித்த சர்ச்சை
கிறிஸ்துவரான விஜய், விதிகளை மீறி திருச்செந்தூர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார் என பல வலதுசாரி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர். உண்மையில் விஜய் செய்தது விதிமீறலா என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம்.
ஆகம விதிகளை மீறினாரா?
தமிழ்நாடு கோவில் நுழைவு அங்கீகார சட்டம் 1947-ன் படி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. 2024-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், ஆகம கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள், கோவிலின் வெளிப்புர பகுதிகளை பார்வையிடவும், கொடிமரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி பார்த்தால் திருச்செந்தூர் முருகன் கோவில், ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட ஒரு கோவிலாகும். ஆனால் மாற்று மதத்தினராக இருந்தாலும் தெய்வத்தின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், இந்து மத வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தால், அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
அதனைப் பின்பற்றி நடிகர் விஜய், எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்த பின்னரே, அவருக்கு திருச்செந்தூர் கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறும் அவரின் ஆதரவாளர்கள். விஜய் கோவிலுக்குள் செல்லும் முன் கையெழுத்திடும் புகைப்படங்களையும் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதன்மூலம் விஜய் ஆகம விதிகளை மீறி கோவிலுக்குள் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள் தவெக-வின் விர்ச்சுவல் வாரியர்ஸ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

