தற்கொலைக்கு முன் போனில் பேசியது என்ன? சித்ராவின் தாய் பரபரப்பு பேட்டி..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் சித்ராவின் கணவர் ஹேமந்த், உறவினர்கள், நண்பர்கள், சக நடிகர், நடிகைகளிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவை ஹேமந்த் தான் அடித்து கொன்றுவிட்டதாக அவருடைய தாயார் குற்றச்சாட்டி வந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்பது உறுதியானது.
இதையடுத்து சித்ராவின் மரண வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ள போலீசார். அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
சித்ராவின் செல்போனைக் கைப்பற்றி ஆய்வு நடத்திய போலீசாருக்கு பல திடுக்கிடும் விஷயங்கள் சிக்கியுள்ளது. அதாவது சித்ராவின் வாட்ஸ் அப் மெசெஜ்களில் பல டெலிட் செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சித்ரா தற்கொலைக்கு முன்னதாக கடைசியா செல்போனில் அவருடைய அம்மாவுடன் பேசியிருக்கிறார். அப்போது சித்ராவின் தாயார் விஜயா, ஹேமந்தை விட்டு பிரிந்து வந்துவிடும் படி அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஹேமந்தும், சித்துவின் அம்மா விஜயாவும் கொடுத்த மன உளைச்சலே அவருடைய தற்கொலைக்கு காரணம் என போலீசார் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் திருமணமான 2 மாதங்களிலேயே சித்ரா இறந்துள்ளதால், ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் இன்று ஆர்.டி.ஓ தன்னுடைய விசாரணையை துவங்கியது. முதல் கட்டமாக சித்ராவின் பெற்றோர், உறவினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஆர்டிஓ விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சித்ராவின் தாய் விஜயா, “எனக்கும் எனது மகளுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நான் அவருடன் சண்டையிடவில்லை. எனது மகள் இறப்பதற்கு முன்னர் என்னிடம் போனில் பேசினார். சித்ராவின் தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம். ஆர்.டி.ஓ. விசாரணையில் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளோம். எந்தவொரு தாயும் மகளின் தற்கொலைக்கு காரணமாக இருக்க மாட்டார்” என்று அழுதபடியே கூறியுள்ளார்.