கொரோனா நேரத்தில் மலர்ந்த சித்ராவின் காதல்..! இந்த விஷயம் தெரியுமா?
சின்னத்திரை தொகுப்பாளினியும், நடிகையுமான சித்ரா மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இவரை பற்றிய பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இவரது காதல் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய சித்ரா எந்த ஒரு திரையுலக பின்னணியும் இன்றி, பல்வேறு கஷ்டங்களை கடந்து தன்னை ஒரு சீரியல் நடிகையாக நிலைநிறுத்திக்கொண்டவர். ஆரம்பத்தில் சின்னபாப்பா பெரியபாப்பா சீரியலில் காமெடி வேடமே கிடைத்தாலும் அதையும் சவாலாக எடுத்து நடித்தார்.
தற்போது இவர் விஜய் டிவியில் நடித்து வரும், 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவ்வப்போது சிரித்த முகத்துடன் இவர் பதிவிடும் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் ரசிகர்கள் பெருமளவு ரசித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி பிரபலமாக எப்போதும் பிஸியாகவே சுற்றி கொண்டிருந்த சித்ரா மனதில் காதலை விதைத்தது கொரோனா ஓய்வு காலம் தான். இதுகுறித்து சித்ரா ஒரு பேட்டியில் கூட தெரிவித்துள்ளார்.
சித்ரா ஈசிஆர் சாலையில் உள்ள வெட்டுவாங்கேணியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் குடும்பத்துடன் குடியேறினார். அந்த வீட்டின் கீழ்பகுதியில் தான் தற்போது அவர் திருமணம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ள ஹேமந்த் ரவியின் வீடு அமைந்துள்ளது.
இந்த நிலையில் தான் திடீர் என கொரோனா பிரச்சனை தலைதூக்கியது. வெளியில் எங்கும் செல்ல முடியாமல் முடங்கி போகவே, அக்கம் பக்கத்தினரிடம் பேச துவங்கியுள்ளார். அப்படி தான் ஹேமந்த்தின் அறிமுகமும் கிடைத்தது. ஆரம்பத்தில் நண்பர்களாக பேசிய இவர்களுக்குள் காதல் துளிர் விட்டது.
இவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதிக்கவே... ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இதை தொடர்ந்து இவர்கள் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டதாக ஹேமந்த் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். எனவே ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.