மாஸ்டர் படத்திற்காக சந்திக்கவில்லை..! விஜய்யின் நல்ல எண்ணத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர்..!
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை சரியானதும் என்ன முடிவு எடுப்பார் என்பது யாருக்கும் தெரியாது என்றும், நடிகர் விஜய் தன்னை சந்தித்தது ஏன்? என்றும் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளது. மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் தான் முதலில் ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளித்திருந்த நிலையில், அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடந்த 27ம் தேதி திடீரென சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இரவு 10 மணிக்கு மேல் ரகசிய சந்திப்பு நடைபெற்றது. அப்போது முதல்வரிடம் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென விஜய் கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டது. அதேபோல் தனது மாஸ்டர் படத்திற்காக வரவில்லை என்றும், ஒட்டுமொத்த திரையரங்கு உரிமையாளர்களின் நிலையை கருத்தில் கொண்டே தங்களை சந்தித்ததாகவும் முதல்வரிடம் விஜய் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை தமிழக அரசு அனுமதிக்கும் என அனைவரும் காத்திருந்தனர். இதனிடையே இன்று தமிழகத்தில் மீண்டும் ஜனவரி 31ம் தேதி வரை ஊடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.12.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், 31.1.2021 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படி என்றால் இதற்கு முன்னதாக தியேட்டர்களுக்கு அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது தெளிவாகிறது. எனவே தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதலமைச்சர் நிராகரித்துவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தற்போது ரஜினிகாந்த் உடல் நிலை சரி இல்லாமல் இருக்கிறார். உடல் நிலை சரியான பின்னர் என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியாது. அதன் பின்னர் கட்சி துவங்குவாரா இல்லையா என அவரது எண்ணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரது எண்ணத்தில் தலையிடுவது சரியாக இருக்காது இது ஜனநாயக நாடு ஒவ்வொருவருக்கும் ஒரு உரிமை உண்டு என கூறியுள்ளார்.
பின்னர் மாஸ்டர் படம் குறித்து விஜய் முதலமைச்சரை சந்தித்து பேசியதாக கூறப்படுவது குறித்து விளக்கம் அளித்த முதலமைச்சர், மாஸ்டர் படம் மட்டும் அல்ல, இன்னும் அனைத்து படங்களுமே ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதற்காக பல கோடி செலவு செய்த தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை தழுவி கொண்டு இருக்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு உதவ வேண்டும் என விஜய் நல்ல என்னதோடு கேட்டுக்கொண்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.