மருத்துவ சீட்டு வாங்கித்தருவதாக 1.5 கோடி மோசடி..! சித்ராவின் கணவர் ஹேம்நாத் அதிரடி கைது..!
மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத், மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான சித்ரா கடந்த மாதம் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது, அவருடன் அவரது காதல் கணவர் ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்தார். எனவே அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக ஹேம்நாத் பதிலளித்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த வருடம் அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடந்தது விசாரணையில் தெரிய வரவே... ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு புழல் அடைக்கப்பட்டுள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது, மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மற்றொரு வழக்கில் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹேம்நாத் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக சுமார் 1 . 5 கோடி மோசடி செய்துள்ளார். இதுகுறித்து தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சித்ரா தற்கொலை விவகாரத்தில், ஹேம்நாத்துக்கு எதிராக பலர் பல்வேறு தகவலை கூறி வரும் நிலையில், மோசடி புகாரில் இவர் மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.