பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேபிக்கு கொரோனா..! அதிர்ச்சியில் மற்ற போட்டியாளர்கள்!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போட்டியாளர்களின் ஒருவரான கேபி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது, நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடி கொண்டே தான் செல்கிறது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒரு சில வாரங்களுக்கு முன் துவங்கிய 'பிக்பாஸ் ஜோடி' போட்டியாளர்களில் ஒருவரான, கேபிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து, 4 ஆவது சீசன் வரை கலந்து கொண்ட பிரபலங்கள், 'பிக்பாஸ் ஜோடி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
நிஷா, தாடி பாலாஜி, சென்ராயன், ஜூலி, ஆஜித், சம்யுக்தா, உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களுடைய தனி திறமையை நிரூபிக்க தயாராகி உள்ளனர்.
அந்த வகையில், கேப்ரில்லாவும்... பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இவர், திடீர் என தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது, மற்ற பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த வாரம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தான் அனைத்து சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டு தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தான் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாகவும்,தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேபிக்கு பிக்பாஸ் சக போட்டியாளர்களான அர்ச்சனா, பாலாஜி, ரம்யா பாண்டியன், ஆஜித் உள்பட பலரும் விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற சில பிரபலங்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ஆயத்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.