BiggBoss Tamil : OTT-யில் பிக்பாஸ்... ஜூலி முதல் வனிதா வரை யாரெல்லாம் கலந்துக்க போறாங்க தெரியுமா?
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்னும் ஓரிரு வாரத்தில் முடியப்போகிறது. இதையடுத்து முக்கிய அறிவிப்பை அக்குழுவினர் வெளியிட உள்ளார்களாம்.
உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது.
இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும் டைட்டில் வின்னர்களாகினர்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசன் இன்னும் ஓரிரு வாரத்தில் முடியப்போகிறது. தற்போது ராஜு, பிரியங்கா, நிரூப், தாமரைச்செல்வி, பாவனி, அமீர், சிபி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார். அவர் யார் என்பது இறுதி வாரத்தில் தெரியவரும்.
சமீப காலமாக ஓடிடி தளங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகின்றன. இதனால் அதில் படங்களை நேரடியாக வெளியிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியில், பிக்பாஸ் நிகழ்ச்சி பிரத்யேகமாக ஓடிடிக்கு என தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சி போல் இல்லாமல் 42 நாட்கள் மட்டுமே ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழிலும் அதே பார்முலாவை பின்பற்ற முடிவு செய்துள்ளனர்.
அதன்படி விரைவில் தமிழிலும் ஓடிடி-க்கெனபிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அல்லது சரத்குமார் தொகுத்து வழங்க உள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிகழ்ச்சியை 70 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதனை பிரபலப்படுத்தும் விதமாக, இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்களான ஜூலி, வனிதா, அனிதா, பாலாஜி முருகதாஸ் உள்பட சிலரை களமிறக்க முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.