ஏ.ஆர்.ரகுமானுக்கு பாட்டுபாட வந்த ஆஷா போஷ்லே பதறியடித்து ஓடிய சம்பவம் பற்றி தெரியுமா?
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் பாட வந்த ஆஷா போஷ்லே, ரெக்காடிங் ஸ்டுடியோவில் இருந்து பதறியடித்து வெளியே ஓடி வந்த சம்பவம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Asha Bhosle Ran Away From AR Rahman Studio
இந்திய திரையுலகையே தன்னுடைய தேன் குரலால் கட்டிப்போட்டவர் தான் பின்னணி பாடகி ஆஷா போஷ்லே. 1933ம் ஆண்டு செப்டம்பர் 8ந் தேதி மகாராஷ்டிராவில் பிறந்த ஆஷா போஷ்லே தனது 10வது வயதிலேயே பாடத் தொடங்கினார். அப்போது முதல் தனது இறுதி காலம் வரை இசை ரசிகர்களை தனது குரலால், மகிழ்வித்துக் கொண்டே இருந்தார். இவர் தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா, வித்யாசாகர் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்கள் பாடி இருக்கிறார். தமிழில் ஆஷா போஷ்லே பாடிய பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து இருக்கின்றன.
ஆஷா போஷ்லே பாடிய தமிழ் பாடல்கள்
குறிப்பாக இளையராஜா இசையில் செண்பகமே செண்பகமே, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி உள்பட 6 பாடல்களை பாடி இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம் பாடல், நேருக்கு நேர் படத்தில் இடம்பெற்ற எங்கெங்கே எங்கெங்கே உள்ளிட்ட தமிழ் பாடல்களை ஆஷா போஷ்லே பாடி இருந்தார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில், வெண்ணிலா வெண்ணிலா, செப்டம்பர் மாதம் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடினார். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஆஷா போஷ்லே மறைவு
இந்திய இசை ரசிகர்களின் இதயம் கவர்ந்த ஆஷா போஷ்லே, திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருந்தையும், இந்தியாவின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் விருதையும் பெற்றுள்ளார். கடந்த ஏப்ரல் 11ந் தேதி ஏற்பட்ட மாரடைப்பை அடுத்து, மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆஷா போஷ்லே, சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. அவரின் மரணம் இசை ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஆஷா போஷ்லே, ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடியபோது ஸ்டூடியோவை விட்டு தலைதெறிக்க ஓடி இருக்கிறார். அந்த தருணம் பற்றி பார்க்கலாம்.
ரகுமான் இசையில் பாடிய ஆஷா போஷ்லே
ஏ.ஆர்.ரகுமான் இசையில் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் பாடல்கள் பாடி இருக்கிறார் ஆஷா போஷ்லே. அப்படி இந்தியில் கடந்த 1995ம் ஆண்டு உருவான திரைப்படம் தான் ரங்கீலா. இப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கி இருந்தார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற தன்ஹா தன்ஹா என்கிற பாடலை ஆஷா போஷ்லே பாடி இருந்தார். அப்பாடல் ரெக்கார்டிங்கிற்காக ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவிற்கு வந்த ஆஷா போஷ்லே ரகுமானிடம் வணக்கம் சொல்லிவிட்டு, அந்த பாடலை கற்றுக் கொண்டாராம்.
ஸ்டூடியோவில் இருந்து வெளியே ஓடிய ஆஷா போஷ்லே
பின்னர் பாடலை ரெக்கார்டிங் செய்வதற்காக வாய்ஸ் ரூமிற்குள் சென்றிருக்கிறார். உள்ளே சென்ற வேகத்தில் குடு குடுவென வெளியே ஓடி வந்துவிட்டாராம் ஆஷா போஷ்லே. பின்னர் என்ன ஆச்சு என ஏ.ஆர்.ரகுமான் விசாரிக்கையில், உள்ளே ரகுமான் வாசனைக்காக ஊதுபத்தி வைத்திருந்தாராம். அந்த பத்தியில் இருந்து வரும் புகையால் தன்னுடைய குரல் பாதிக்கப்படும் என்று ஆஷா போஷ்லே சொன்னதை அடுத்து அந்த அறையில் இருந்து பத்தியை வெளியே எடுத்துவிட்டாராம் ரகுமான். அதன்பின்னரே தன்ஹா பாடலை பாடி இருக்கிறார் ஆஷா போஷ்லே. அப்பாடல் செம ஹிட் அடித்ததோடு, 17 ஆண்டுகளுக்கு பின் அவருக்கு பிலிம்பேர் விருதும் வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

