பத்ம பூஷன் விருது வென்ற கையோடு கண்டனம் தெரிவித்த அஜித் - என்ன விஷயம்?
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நடிகர் அஜித் கண்டித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Ajith condemns Pahalgam attack: "Such incidents should not happen!"
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்துத் தாக்கினர். இதில் 25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். 2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் 40 மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்கள் கொல்லப்பட்டதிலிருந்து இப்பகுதியில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அஜித் கண்டனம்
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளும் அதன் சதிகாரர்களும் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வகையான விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு திரைப்பிரபலங்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று டெல்லியில் பத்ம பூஷன் விருது வாங்கிய் அஜித் குமார், அதன்பின் ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பேசி உள்ளார். அதில், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்றும், மக்கள் ஒருவருக்கொருவர் அனுதாபம் காட்ட வேண்டும் என்றும் அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் திரெளபதி முர்மு! தலைநகரில் ‘தல’க்கு கிடைத்த அங்கீகாரம்
இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது
தொடர்ந்து அஜித் பேசியதாவது "பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது இரங்கல்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்று நான் நம்புகிறேன். காலப்போக்கில், நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அனுதாபம் காட்ட கற்றுக்கொள்வோம், நமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, அமைதியான சமூகமாக வாழ்வோம் என்று நான் நம்புகிறேன்," என்று அஜித் கூறினார்.
இந்தியாவிற்குள் நாம் சண்டையிடக்கூடாது
மேலும், நாட்டைப் பாதுகாக்க அயராது உழைக்கும் ஆயுதப் படைகளின் துணிச்சலையும் தியாகங்களையும் அஜித் பாராட்டினார். "நானும் ஆயுதப் படைகளைச் சேர்ந்த பலரைச் சந்தித்தேன். அவர்களின் தியாகங்களுக்கு நாம் அனைவரும் அவர்களைப் பாராட்டுகிறோம் என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். நாம் அமைதியாக உறங்கும் பொருட்டு அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள்.
அவர்கள் நமது எல்லைகளைப் பாதுகாக்க அயராது உழைக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களின் நினைவாக, நமது நாட்டிற்குள், ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தவும், ஒவ்வொரு மதத்தையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இந்தியாவிற்குள் நாம் சண்டையிடக்கூடாது. நாம் ஒன்றுபட்ட அமைதியான சமூகமாக இருக்க வேண்டும்," என்று அஜித் கூறினார்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய அஜித் படங்கள் ஒரு பார்வை!