Aishwaryaa : அவர் தான் எனக்கு குரு... என் அப்பா மாதிரி! ஒரே மெசேஜில் தனுஷ் ரசிகர்களை குஷியாக்கிய ஐஸ்வர்யா
Aishwaryaa rajinikanth : நடிகர் தனுஷை விட்டு பிரிந்தாலும், அவரது குடும்பத்தினர் மீது ஐஸ்வர்யா வைத்திருக்கும் அன்பைப் பார்த்து தனுஷ் ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர்.
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர் இதுவரை 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
18 ஆண்டுகள் நீடித்து வந்த இவர்களது திருமண உறவு அண்மையில் முடிவுக்கு வந்தது. கடந்த ஜனவரி மாதம் இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தாங்கள் பிரியப்போவதாக அறிவித்தனர். இவர்களது திடீர் அறிவிப்பு கோலிவுட்டையே பரபரப்பாக்கியது. பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், குடும்பத்தினரும், நண்பர்களும் இறங்கினர்.
இதன் பலனாக விவாகரத்து செய்யும் முடிவை கைவிட்ட தனுஷ், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்த வாழப்போவதில்லை என்ற முடிவில் தீர்க்கமாக இருக்கிறார். மறுபுறம் ஐஸ்வர்யா இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது முசாபிர் என்கிற மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி உள்ளார்.
இந்நிலையில், நடிகர் தனுஷை விட்டு பிரிந்தாலும், அவரது குடும்பத்தினர் மீது ஐஸ்வர்யா வைத்திருக்கும் அன்பைப் பார்த்து தனுஷ் ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர். தனுஷின் அண்ணனும், தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவருமான செல்வராகவன் நேற்று பிறந்தநாள் கொண்டாடினார்.
அவருக்கு ஐஸ்வர்யா சொன்ன வாழ்த்து தான் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. செல்வராகவனை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “என் குரு... நண்பர்... தந்தையை போன்றவர் என சொல்லிக்கொண்டே போகலாம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வராகவன்” என பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இதைப்பார்த்த ரசிகர்கள் விரைவில் தனுஷுடன் சேர்ந்துவிடுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஜய் தந்தைக்கு இப்படி ஒரு நிலைமையா?... பிளாட்ஃபார்மில் படுத்து தூங்கும் எஸ்.ஏ.சி - வெளியான ஷாக்கிங் வீடியோ