டாஸ்மாக் வருமானத்தில் தான் டான் பிக்சர்ஸ் இயங்கியது! புது குண்டை தூக்கிப் போட்ட பிரபலம்
ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் டாஸ்மாக் வருமானத்தில் இயங்கி வந்ததாக பிரபலம் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு புயலை கிளப்பி உள்ளார்.

Dawn Pictures Run in Tasmac Revenue?
தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய பேசுபொருள் ஆகி உள்ளது. இதனை களையெடுக்கும் விதமாக அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் இயக்குநர் மற்றும் அது தொடர்புடைய பல்வேறு நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி டான் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
ஆகாஷ் பாஸ்கரனின் 500 கோடி முதலீடு
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் குறுகிய காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரிக்க தொடங்கினார். அவர் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் இட்லி கடை திரைப்படம் தயாராகி வருகிறது. இதுதவிர சிவகார்த்திகேயன், ரவி மோகன் கூட்டணியில் உருவாகி வரும் பராசக்தி படத்தையும் அவர் தான் தயாரிக்கிறார். இதுதவிர சிம்பு நடிப்பில் உருவாகும் எஸ்.டி.ஆர்.49 படத்தின் தயாரிப்பாளரும் ஆகாஷ் பாஸ்கரன் தான். இப்படி ஒரே நேரத்தில் 500 கோடி முதலீடு செய்து மூன்று உச்ச நட்சத்திரங்களின் படங்களை தயாரித்து வருகிறார் ஆகாஷ்.
யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஆவார். அவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முன் நின்று நடத்தி வைத்தார். மேலும் இந்த திருமண விழாவில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கலந்துகொண்டது. ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குனராகவும் அறிமுகமாகி உள்ளார். அவர் இயக்கத்தில் இதயம் முரளி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் அதர்வா ஹீரோவாக நடித்து வருகிறார்.
டாஸ்மாக் வருமானத்தில் இயங்குகிறதா டான் பிக்சர்ஸ்?
ஆகாஷ் பாஸ்கரனுக்கு 500 கோடி முதலீடு செய்யும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவு ஒன்றில் டாஸ்மாக் வருமானத்தில் தான் டான் பிக்சர்ஸ் இயங்கி வருவதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “தியாகி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனையின் போது மருத்துவமனையில் நடத்திய நெஞ்சு வலி நாடகத்தை காண்பதற்கு சென்றார் துணை முதலமைச்சர் உதயநிதி. கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்? பத்து ரூபாய் பாலாஜிக்கும் பராசக்தி தயாரிப்பாளருக்கும் என்ன தொடர்பு? உதயநிதி ஆகாஷ் பாஸ்கரனை தேடி தேடி அழைத்துச் மருத்துவமனைக்குள் செல்வது எதற்கு? மொத்தத்தில் TASMAC வருமானத்தில் DAWN PICTURES இயங்கியது என்பது வெட்ட வெளிச்சமாகிறது” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
தியாகி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை சோதனையின் போது மருத்துவமனையில் நடத்திய நெஞ்சு வலி நாடகத்தை காண்பதற்கு சென்றார் துணை முதலமைச்சர் உதயநிதி.
கையோடு ஆகாஷ் பாஸ்கரனை உள்ளே அழைத்துச் சென்றது ஏன்?
பத்து ரூபாய் பாலாஜிக்கும் பராசக்தி தயாரிப்பாளருக்கும் என்ன தொடர்பு?
உதயநிதி ஆகாஷ்… pic.twitter.com/ikpb97uYEz— DJayakumar (@djayakumaroffcl) May 21, 2025