“இஸ்லாமிற்கு மாறியது என் தனிப்பட்ட விருப்பம்”... சர்ச்சை நடிகையின் அதிரடி விளக்கம்...!
தற்போது தன்னுடைய நிச்சயதார்த்தம், மதமாற்றம் உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு சஞ்சனா கல்ராணி விளக்கமளித்துள்ளார்.
கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய போதைப்பொருள் வழக்கில் கைதானவர் பிரபல நடிகை சஞ்சனா கல்ராணி. உடல்நலக்குறைபாடு காரணமாக சிறையில் இருந்த அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது லேப்ரோஸ்கோபி சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கிறார்.
போதைப் பொருள் வழக்கில் சிக்குவதற்கு முன்னதாக நடிகை சஞ்சனா கல்ராணி பற்றிய செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது அஜீஸ் பாஷா என்ற மருத்துவரை சஞ்சனா திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்தது.
இருவரும் வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலை சஞ்சனா கல்ராணி மறுத்திருந்தார். இந்நிலையில் சஞ்சனாவும், மருத்துவர் அஜீஸ் பாஷாவும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
இடையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா லாக்டவுன் காரணமாக 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கவிருந்த திருமணமும் தள்ளிவைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 2018ம் ஆண்டு சஞ்சனா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாகவும், தன்னுடைய பெயரை மஹிரா என மாற்றிக்கொண்டதாகவும் சான்றிதழ் ஒன்று வெளியானது.
தற்போது தன்னுடைய நிச்சயதார்த்தம், மதமாற்றம் உள்ளிட்ட சர்ச்சைகளுக்கு சஞ்சனா கல்ராணி விளக்கமளித்துள்ளார். திருமண நிச்சயதார்த்தம் நடந்து உண்மை தான் என ஒப்புக்கொண்டுள்ள சஞ்சனா, கொரோனா காலத்தில் அது நடந்ததால் வெளியில் தெரிவிக்கவோ, கொண்டாடவோ இல்லை என கூறியுள்ளார்.
தற்போது நமாஸ் செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறியுள்ள சஞ்சனா, அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பதாகவும், நான் இஸ்லாமிற்கு மாறியது என் தனிப்பட்ட விருப்பம் என்றும் கூறியுள்ளார். மேலும் இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.