மோசமடைந்த உடல்நிலை... நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி?
நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த ஆண்டு தன் காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் சினிமாவில் முழுவீச்சில் நடிக்கத் தொடங்கினார். குறிப்பாக புஷ்பா படத்திற்காக இவர் ஆடிய கிளாமர் நடனம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இருந்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன.
நடிகை சமந்தா நடிப்பில் கடந்த நவம்பர் 11-ந் தேதி யசோதா திரைப்படம் வெளியானது. இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்திருந்தார் சமந்தா. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை ஈட்டி வந்தது. குறிப்பாக வெளியான 10 நாட்களில் யசோதா திரைப்படம் உலகளவில் ரூ.33 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையும் படியுங்கள்... வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’யில் நாக சைதன்யா... மாஸான டைட்டில் உடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ
யசோதா படத்தின் வெற்றி சமந்தாவுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலையில் அவர் இருந்து வருகிறார். ஏனெனில் அவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகதவும், தற்போது தான் அதிலிருந்து படிப்படியாக குணமாகி வருவதாகவும் யசோதா படத்தின் புரமோஷனின் போது கூறி கண்ணீர் சிந்தினார் சமந்தா.
இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இருப்பினும் சமந்தா தரப்பில் இருந்து இதுகுறித்த எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வாரிசு நடிகையை மணக்கிறார் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்... திருமணம் எப்போது தெரியுமா?