போதைப்பொருள் வழக்கு: நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா அதிரடி கைது...!!
இன்று காலை பெங்களூரில் இந்திரா நகரில் உள்ள சஞ்சனா கல்ராணி வீட்டில் சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்
பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது.
இதனையடுத்து கன்னட திரைப்பட இயக்குநரான இந்திரஜித் லங்கேஷிடம் குற்றப்பிரிவு போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் தனக்கு தெரிந்த 15 கன்னட திரையுலகினரின் பெயர்களை போலீஸாரிடம் கூறி இருப்பதாக தெரியவந்தது.
அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
மேலும் கடந்த வாரம் கன்னட நடிகை ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பெண் போலீசார் உட்பட 7 பேர் கொண்ட குழு அதிரடி சோதனையில் இறங்கியது.
இதையடுத்து நடிகை ராகினி திரிவேதியை பெங்களூர் போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணியின் அக்காவும், பிரபல நடிகையுமான சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
இன்று காலை பெங்களூரில் இந்திரா நகரில் உள்ள சஞ்சனா கல்ராணி வீட்டில் சென்ட்ரல் கிரைம் பிராஞ்ச் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அதற்குப் பிறகு சஞ்சனா கல்ராணியை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட சஞ்சனா கல்ராணி “ஒரு காதல் செய்வீர்” என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.