நடிகை கங்கனா ரனாவத்துக்கு பிடிவாரன்ட்! மும்பை நீதிமன்றம் அதிரடி!
பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை கங்கனா ரணவத் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
நடிகை கங்கனா ரனாவத், தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'தாம் தூம்' படத்தில் அறிமுகமானவர். தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் கங்கனா ரனாவத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், ஹிந்தி பாடல் ஆசிரியர் ஜாவித் அக்தர், ரித்திக் ரோஷன் உடனான உறவில் இருக்கும் பிரச்சினைக்காக தன்னை அவர் அமைதி காக்கும்படி கூறியதாக தெரிவித்தார். ஆனால் ஜாவித் அக்தர் இதனை அடியோடு மறுத்ததோடு, தன்னுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கங்கனா செயல்படுவதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கங்கனா மீது மும்பை, அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதில் டிவி பேட்டிகளில் தன்னைப்பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கங்கனா கூறி இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி, மார்ச் 1 - ஆம் தேதி, நடைபெற உள்ள விசாரணைக்கு கங்கனா ஆஜர் ஆகவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த, அவதூறு வழக்கின் விசாரணைக்கு கங்கனா ஆஜராகாததால் மும்பை அந்தேரி கோர்ட் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.