சொன்னதை செய்து காட்டிய ஜோதிகா... தஞ்சை மருத்துவமனைக்கு செய்த மாபெரும் உதவி...!
எந்த தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு உதவி செய்யுங்கள் என சொல்லி நடிகை ஜோதிகா பிரச்சனையில் சிக்கினாரோ, அதே மருத்துவமனைக்கு இன்று தன்னால் ஆன உதவிகளை செய்து பாராட்டுக்களை குவித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது விழாவில் ஜோதிகா பேசிய ஒரு விஷயம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி சர்ச்சைகளுக்கு வித்திட்டது. பல மாதங்களுக்கு முன்பு விருது விழாவில் பங்கேற்ற ஜோதிகா தனது ராட்சசி பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது “பிரகதீஸ்வரர் ஆலயம் இங்க பிரபலமானது, அழகாக இருக்கும் கண்டிப்பாக நீங்க பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே அதை பார்த்திருக்கேன். உதய்பூர் அரண்மனை மாதிரி நன்றாக பராமரித்து வருகிறார்கள். அடுத்தநாள் என் ஷூட்டிங்கிற்கு போற வழியில் மருத்துவமனை ஒன்றை பார்த்தேன். அது சரியாக பராமரிக்கப்படாமல் இருந்தது. நான் பார்த்தவற்றை என் வாயால் சொல்ல முடியாது”
“எல்லாருக்கும் கோரிக்கை, ராட்சசியில் கூட இயக்குநர் கெளதம் சொல்லியிருக்காரு கோவிலுக்காக அவ்வளவு காசு கொடுக்குறீங்க. அவ்வளவு பராமரிக்கிறீங்க. கோவில் உண்டியலில் காசு போடுறீங்க, தயவு செய்து அதே தொகையை பள்ளிகளுக்கு கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள். இது மிகவும் முக்கியம். எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. நான் அந்த கோவிலுக்குள் போகவில்லை. அந்த மருத்துவமனையைப் பார்த்த பிறகு போகவில்லை. மருத்துவமனைகளும், பள்ளிகளும் அந்த அளவுக்கு முக்கியம். எனவே அவற்றுக்கும் நிதியுதவி செய்வோம்” என்று பேசியிருந்தார்.
தஞ்சை பெரிய கோவிலை ஜோதிகா அவமானப்படுத்திவிட்டதாக கூறி அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. சோசியல் மீடியாவில் ஜோதிகாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவியது.
இதற்கு எல்லாம் பதிலடி கொடுத்த சூர்யா சொன்ன கருத்தில் மற்றமில்லை, சேவையே சிறந்தது என அறிக்கை மூலம் விளக்கம் கொடுத்தார். ஜோதிகா விளம்பரத்திற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தனது சொல்லை செயலால் நிரூபித்து காட்டியுள்ளார் ஜோதிகா
ஆம், தஞ்சாவூரில் அவர் பார்த்ததாக சொன்ன மோசமான நிலையில் இருந்த அந்த மருத்துவமனைக்கு சுமார் 25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொடுத்துள்ளார்.
அகரம் அறக்கட்டளை நிர்வாகிகள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு ஆகியோரிடம் வழங்கினர். ஜோதிகாவின் இந்த சேவையை அமைச்சர்களும், மருத்துவமனை நிர்வாகிகளும் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி குழந்தைகள் வார்டில் அழகிய ஓவியங்களை வரைந்து வண்ணமயமாக அழகாக்கியுள்ளார்.
மருத்துவனை வளாகத்தில் குழந்தைகள் விளையாடுவதற்காக இருந்த பூங்காவை சீரமைத்து கொடுத்துள்ளார். சொன்னதை செய்து காட்டிய ஜோதிகாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.