29 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் சமந்தாவின் மாமியார் அமலா..!
1986 ஆம் ஆண்டு, இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'மைதிலி என்னை காதலி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா.
இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களின் நடிக்க துவங்கினார்.
அந்த வகையில் அதே ஆண்டில் இவர் நடிப்பில் வெளியான 'மெல்ல திறந்த கதவு', 'கண்ணே கணியமுதே', 'ஒரு இனிய உதயம்' ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘வேலைக்காரன்’, ‘மாப்பிள்ளை’, உலக நாயகன் கமல்ஹாசனுடன் ‘சத்யா’, ‘வெற்றி விழா’ பிரபுவுடன் அக்னி நட்சத்திரம்’, ‘இல்லம்’, ‘நாளைய மனிதன், சத்யராஜூடன் ‘ஜீவா’ வேதம் புதிது உள்பட பல முன்னணி நடிகர்களுடன் 80கள், 90களில் நடித்தார்.
தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இவர் தமிழில் கடைசியாக 1991 ஆம் ஆண்டு வெளியான 'கற்பூர முல்லை' என்கிற படத்தில் தான் நடித்தார். இயக்குனர் ஃபாசில் இயக்கிய இந்த படத்தில் ராஜா, ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மற்ற மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டிருந்ததால் இவரால் தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை.
பின்னர் 1992 ஆம் ஆண்டு நடிகர் நாகர்ஜூனாவை திருமணம் செய்து கொண்ட பின் படங்கள் நடிப்பதையும் குறைத்து கொண்டார்.
இந்நிலையில் கிட்ட தட்ட 29 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் அமலா.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 18வது படத்தில் படத்தில் தான் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக ஷர்வானந்த் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ரிதுவர்மா நடிக்கவுள்ளார்.
தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீகார்த்திக் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.