போலி கணக்கு மூலம் மோசடி... பிரபல நடிகர் டிஜிபியிடம் பரபரப்பு புகார்...!
தனது பெயரில் போலி கணக்கு உருவாக்கி ஆன்லைனில் ஒரு கும்பல் வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபடுவதாக புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஆவாரம்பூ என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் வினீத், தொடர்ந்து புதிய முகம், ஜாதிமல்லி, காதலர் தினம், மே மாதம், காதலர் தினம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த், ஜோதிகா நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக நடித்து வந்த வினீத் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது பெயரில் மோசடி கும்பல் ஒன்று சுற்றுவதாக வினித் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது பெயரில் போலி கணக்கு உருவாக்கி ஆன்லைனில் ஒரு கும்பல் வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபடுவதாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே இரண்டாவது முறையாக புகாரளித்துள்ள வினீத், இந்த மோசடி குறித்து தனது முகநூல் பக்கத்திலும் எச்சரித்துள்ளார்.
கேரள டிஜிபிக்கு அனுப்பியுள்ள அந்த புகார் மனுவில், தங்கள் குடும்ப புகைப்படத்தைப் தவறாகப் பயன்படுத்தியும், தனது வாட்ஸ் அப் புரபைலை போலியாக பயன்படுத்தியும் மோசடி செய்து வருவதாகக் கூறியுள்ளார். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் வினீத் கூறியுள்ளார்.