பிறந்தநாளில் சர்ச்சையில் சிக்கிய விஜய்சேதுபதி... பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதால் பரபரப்பு...!
இந்நிலையில் பட்டாகத்தியில் விஜய் சேதுபதி கேக் வெட்டுவது போன்ற புகைப்படங்கள் வைரலானது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் விஜய்சேதுபதி. குணச்சித்திர நடிகர், வில்லன், கதையின் நாயகன் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்வதில் கில்லாடி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெளியானது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக வில்லன் பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வெளுத்து வாங்கியிருப்பதாகவும், விக்ரம் வேதா படத்திற்கு பிறகு தனித்துவமான வில்லனாக நிமிர்ந்து நிற்பதாகவும் விஜய் சேதுபதியை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
எவ்வளவுக்கு எவ்வளவு புகழ் கிடைக்கிறது அதே அளவிற்கு சர்ச்சையில் சிக்குவதும் பிரபலங்களுக்கு வழக்கமாக நடப்பது தான். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது. இதனால் அந்த படத்திலிருந்து விலகினார்.
சமீபத்தில் துக்ளக் தர்பார் படத்தில் சீமானை வம்புக்கு இழுக்கும் விதமாக காட்சிகள் இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு தயாரிப்பாளர், நடிகர் பார்த்திபன் தரப்பில் இருந்து விளக்கமும் கொடுக்கப்பட்டது.
இன்று விஜய் சேதுபதி தன்னுடைய 43வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சோசியல் மீடியாவில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களும், காமன் டி.பி., போஸ்டர்கள் என தூள் பறக்க ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பட்டாகத்தியில் விஜய் சேதுபதி கேக் வெட்டுவது போன்ற புகைப்படங்கள் வைரலானது.
நண்பர்களுடன் சேர்ந்து விஜய் சேதுபதி பட்டாக்கத்தி மூலமாக கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிகிறது. இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.