'24 ஆம் புலிகேசிக்காக' தயாரான வடிவேலு... முக்கிய பிரபலத்தால் முடிவுக்கு வந்த பிரச்சனை! அசத்த வரும் வைகை புயல்!
நடிகர் வடிவேலு நடிப்பில், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகி வந்த '24 ஆம் புலிகேசி படத்தின், பிரச்சனை பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் எனவே வடிவேலு மீண்டும் இந்த படத்திலேயே கம் பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு வடிவேலு ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் தான் "இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி". இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கிய இப்படம் ரசிகர்களில் தாறுமாறாக ஹிட் அடித்தது. காமெடியில் கலக்கிய வடிவேலுவை கதாநாயகனாக களமிறக்கி கல்லா கட்டினார்கள். பாக்ஸ் ஆபிஸிலும் முன்னணி நாயகர்களுக்கு இணையான வசூலை அள்ளியது.
ஆனால் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், 'தெனாலிராமன்', 'எலி' போன்ற திரைப்படங்களுக்கு மக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் தோல்வியை தழுவியது. பாக்ஸ் ஆபிஸிலும் மண்ணை கவ்வியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஒரு பெரிய பிரேக் எடுத்துக்கொண்ட வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் விஷால் நடித்த 'கத்தி சண்டை' படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து 'சிவலிங்கா' நடித்தார் இதனைத்தொடர்ந்து விஜய்க்கு அப்பாவாக 'மெர்சல்' படத்திலும் நடித்திருந்தார்.
காமெடி வேடங்களில் நடித்தாலும் ஹீரோ ஆசையில் இருந்து வெளியே வராத வடிவேலு " 24 புலிகேசி" படத்தின் இரண்டாம்" பாகத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க தயாரானார். இந்த படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்க, இயக்குனர் ஷங்கர் தயாரிப்பதாக இருந்தார். இந்த படத்தின் பூஜைகள் அனைத்தும் போடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அனைத்தும் வெளியான நிலையில், வடிவேலு சரியாக படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என படதரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து, இதுவே மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து... இயக்குனர் ஷங்கர் வடிவேலுவால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். எனவே வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டதால் இவரை வைத்து படம் இயக்க தயாரான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கூட பின்வாங்கினர்.
சுமார் 5 வருடத்திற்கு மேலாக இழுபறியாக இருந்த '24 ஆம் புலிகேசி' படத்தின் பிரச்சனை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு மீண்டும் இந்த படத்தின் நடித்து கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், கூறப்படுகிறது.
இவர்களது பிரச்னையை தீர்த்து வைக்க தற்போது, பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பிரச்சனை முடிந்த பின், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் படப்பிடிப்பு துவங்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.