பாட்டியின் மறைவால் மனமுடைந்து போன சாந்தனு... உருக்கமான கண்ணீர் பதிவு...!
பாட்டியின் மறைவு குறித்து சாந்தனு பாக்யராஜ் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'நெஞ்சில் ஒரு முள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். இந்த படத்தை தொடர்ந்து கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, டார்லிங் டார்லிங், உள்ளிட்ட பல படங்களில் வரிசையாக நடித்தார். தமிழை தவிர, மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
நடிப்பை தாண்டி, ஆராரோ ஆரிராரோ, அம்மா வந்தாச்சு, வேட்டிய மடிச்சிக்கட்டு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். 80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், பிரபல இயக்குனர் கே.பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய பூர்ணிமா, தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பூர்ணிமா பாக்யராஜின் தாயாரான சுப்புலட்சுமி ஜெயராம் வயது முதிர்வு காரணமாக தனது 85வது வயதில் நேற்று காலமானார். இந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாட்டியின் மறைவால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கும் நடிகர் சாந்தனு, தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார்.
தனது பாட்டி மறைவு குறித்து ட்விட்டரில் உருக்கமாக கருத்து பதிவிட்டிருக்கும் ஷாந்தனு, “அவர் எங்களைவிட்டு பிரிந்துசென்று 24 மணி நேரம் கூட ஆகவில்லை. ஆனால், நாங்கள் மிகவும் கலக்கமடைந்துள்ளோம். ஆனால், எனக்குத் தெரியும் அவர், தாத்தாவுக்கு அருகில் மகிழ்ச்சியான இடத்தில் இருப்பார். எங்களையும் எங்களை சுற்றியுள்ளவர்களையும் ஆசிர்வதியுங்கள்”
“ஐ லவ் யூ. நான் உங்களை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவழியுங்கள்.. நேரம் தவறிவிட்டால் அது எப்போதும் முடியாது.” என்று கூறியுள்ளார்.
மனமுடைந்து போன சாந்தனுவிற்கு அவருடைய ரசிகர்கள் ஆறுதலும், பாட்டியின் மறைவிற்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.