முதலமைச்சரை சந்தித்த கொரோனா நிவாரண நிதி வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! எத்தனை லட்சம் தெரியுமா?
முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக பிரபலங்கள் மற்றும், தொழிலதிபர்கள் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தலைமைச்செயலகத்தில் முக. ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிதி வழங்கியுள்ளார்.
கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை மக்களை அதிகம் வாட்டி வதக்கி வருகிறது. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்வதால், மத்திய - மாநில அரசுகள் மக்களை கொரோனா தாக்கத்தில் இருந்து காப்பாற்ற துரிதமாக செயல்பட்டு வருகிறது.
படுக்கைகள், ஆக்சிஜன் தேவை, வெண்டிலேட்டர் , தடுப்பூசி போன்றவையின் தேவைகள் அதிக மாகிக்கொண்டே செல்கிறது. 18 வயதை கடந்த பலர் தடுப்பூசி கிடைக்காமல் போடமுடியாது நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்து உபகரணங்களை வாங்க, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று தற்போது நிதி உதவிகள் கிடைக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே நடிகர் சூர்யா ரூ.1 கோடி, அஜித் ரூ.25 லட்சம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரூ.1 கோடி, ஏ.ஆர்.முருகடோஸ் ரூ.25 லட்சம், இயக்குனர் ஷங்கர் ரூ.10 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ .25 லட்சம், வெற்றிமாறன் ரூ.10 லட்சம் என தொடர்ந்து பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை தலைமை செயலகத்தில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, ரூ .50 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். கொரோனா நெருக்கடிக்கு நடுவிலும் நேரடியாக வந்து ஸ்டாலினை சந்தித்து ரஜினிகாந்த் காசோலையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், கொரோனாவை ஒழிக்க தமிழக அரசின் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்து கொண்டு கடந்த வாரம், தனி விமானம் மூலம் சென்னை வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வந்த மறு தினமே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போட்டு கொண்டார். பின்னர் சில நாட்கள் ஓய்வில் இருந்த இவர், தற்போது கொரோனா நிவாரண நிதி கொடுப்பதற்காக வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.