நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் உடல்நல குறைவு..! மருத்துவமனையில் அனுமதி!
மருத்துவரும், நடிகருமான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லத்திகா என்ற் படம் மூலமாக 2011ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பவர் ஸ்டார் சீனிவாசன். சொந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமானதால் பவர் ஸ்டாரை கலாய்க்காதவர்களே கிடையாது. ஆனாலும் அந்த கலாய்களை எல்லாம் பிளஸாக மாற்றிய பவர் ஸ்டார், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக உயர்ந்துள்ளார்.
நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் பவர் ஸ்டாருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்து.
அதன் பின்னர் கோலி சோடா, மெர்லின், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா, என்ன தவம் செய்தாயோ, ஓடு ராஜா ஓடு, காட்டுப் புறா ஆகிய படங்களில் நடித்தார்.
கடைசியாக கொரோனாவிற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.
சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம், ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஏற்பட்ட கடும் முதுகு வலியால் பவர் ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது கொரோனா தொற்று இருக்கிறதா? என பரிசோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இவரது உடல் நிலை குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.