அபிநய்க்கு இந்த நிலையா? சொந்த பந்தம் வராததால்... இறுதிச்சடங்கில் வந்த பிரச்சனை!
Abhinay death Relatives Refuse to Attend the Final Rites: கடந்த இரண்டு வருடங்களாகவே, கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த, அபிநய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவரது இறுதி சடங்கில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது.

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம்:
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் 'துள்ளுவதோ இளமை'. இளவட்ட ரசிகர்களை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில், தனுஷுக்கு நண்பனாகவும் கிட்ட தட்ட இரண்டாவது நாயகன் போல் நடித்திருந்தவர் தான் அபிநய்.
ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வி:
தனுஷ் இந்த படத்தில் நடித்த போது விமர்சித்த பலர், அபிநய் ஹீரோவாக நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறினர். அந்த அளவுக்கு தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இந்த படத்திற்கு பின்னர் அபிநய்க்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் சிங்கார சென்னை, ஜங்ஷன் போன்ற படங்களில் நடித்தார் ஆனால் இந்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்ததால்... மீண்டும் பிரெண்ட் ரோல், அமெரிக்க மாப்பிள்ளை, போன்ற ரிச் பாய் கெட்டப்பில் நடிக்க துவங்கினார்.
அபிநய் வாழ்க்கையை புரட்டி போட்ட இழப்பு:
பல படங்களில் குணசித்ர நடிகராக இவர் நடித்து கொண்டிருந்த போது தான் இவர் வாழ்க்கையில்... நடக்க கூடாத சில சம்பவங்கள் எல்லாம் நடந்தது. அபிநய்யின் தாய் மற்றும் தந்தை அடுத்தடுத்து உயிரிழந்தது... இவரை மிகுந்த மன அழுத்தத்தில் தள்ளியது. நடிப்பில் கவனம் செலுத்தாமல், குடிக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் விற்று தன்னுடைய வாழ்க்கையை கவனிக்க துவங்கினார்.
கல்லீரல் பிரச்சனை:
ஒரு கட்டத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடியபோது கிடைக்காமல் போனது. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வந்த இவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு கல்லீரலில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. இவருடைய மருத்துவ செலவுக்கு தனுஷ், பாலா உட்பட பல சினிமா பிரபலங்கள் உதவி செய்த போதிலும்... இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாலாவுக்காக வந்த அபிநய்:
தீவிர உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த போதிலும், தனக்கு உதவிய பாலா ஹீரோவாக நடித்த 'காந்தி கண்ணாடி' திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார். இந்நிலையில் இவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அதில் புதிய பிரச்சனை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
உறவினர் வருகைக்காக காத்திருப்பு :
அபிநய் இறுதி சடங்கு செய்ய, உறவினர்கள் வருகைக்காக அவரது நண்பர்கள் மற்றும் அபிநய்க்கு நெருங்கியவர்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் அவரது உறவினர்கள் யாரும் இல்லை என்றும், பெங்களூரில் இருப்பதால் அவர்களை தொடர்பு கொள்ள முயன்று வருகிறார்களாம். செய்தியில் அபிநய் இறப்பு குறித்து அறிந்த பின்னர் தங்களை தொடர்பு கொள்ளும்பாரு நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நடிகர் சங்கம் எடுத்த முடிவு:
யாரும் இறுதி சடங்கு செய்ய முன்வராத பச்சத்தில், நடிகர் சங்கமே முன்னின்று இதை நடத்தும் என பூச்சு முருகன் கூறி உள்ளதாக அபிநய் நண்பர் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதே போல் அபிநய் மருத்துவமனையில் இறந்துள்ளதால், உறவினர் கையெழுத்து அவசியம் என போலீசார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் அபிநய்க்கு வந்த இந்த நிலை யாருக்கும் வந்துவிட கூடாது என, தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.