தீராத சோகம்... 2000 பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் திடீர் மரணம்...!
இதுவரை சுமார் 2000 டப்பிங் மொழி பாடல்களை எழுதிய பாடலாசிரியரும், வசனகர்த்தாவுமான வென்னில கண்டி மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தட்டுத்தடுமாறி திரையுலகம் இப்போது தான் சற்றே சுவாசிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி, தியேட்டர்களில் பார்வையாளர்கள் குறைப்பு, ஓடிடி ரிலீஸ் என ஏகப்பட்ட தடைகளை கடந்து, தற்போது தான் பார்வையாளர்கள் தியேட்டர்களில் படம் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல் டாப் ஸ்டார்கள் முதல் புதுமுகங்கள் வரை பரபரப்பாக படப்பிடிப்புகளில் பங்கேற்கவும் ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு தான் பன்மொழி மக்களையும் தனது இனிய குரலால் கட்டிப்போட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டும் வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
அந்த சோகம் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாத நிலையில், 2021 ஆவது ஆண்டு துவங்கிய பிறகும் அடுத்தடுத்து திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மரணமடைந்து வருவது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யும் போது அதற்கு பாடல்கள் மற்றும் வசனம் எழுதுபவர் வென்னில கண்டி. 64 வயதாகும் இவர், நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் வசித்து வரும் இவர் , இதுவரை 2000 டப்பிங் பாடல்களை எழுதியுள்ளர். இவர் வரிகளில் வெளியான தெலுங்கு பாடல்கள் பல சூப்பர் ஹிட் வெற்றிபெற்றுள்ளது.
மேலும் 200 க்கும் மேற்பட்ட டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதியும் உள்ளார். இவரது மூத்த மகன் சங்கர், தன்னுடைய தந்தையைப் போலவே டப்பிங் படங்களுக்கு பாடல் மற்றும் வசனம் எழுதி வருகிறார். மற்றொரு மகன் ரகெண்டு மவுலி பாடல் எழுதுவதுடன் பாடகர், மற்றும் தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முக்கிய பிரபலமாக இறந்த இவரது மரணம், இரு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள், மற்றும் இவருக்கு நெருக்கமானவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு பலர் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.