- Home
- Career
- வேலைவாய்ப்பு திருவிழா.! 8வது படித்திருந்தாலே போதும்- அக்டோபர் 31ல் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு
வேலைவாய்ப்பு திருவிழா.! 8வது படித்திருந்தாலே போதும்- அக்டோபர் 31ல் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு
அக்டோபர் 31, 2025 அன்று கிண்டியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் இம்முகாமில், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்த தகுதியுள்ள இளைஞர்கள் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினைப் பெறலாம்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் துறை மூலம் ஒவ்வொரு மாவட்டங்களில் வேலைவாய்ப்புக்கான சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 31.10.2025 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து 31.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு. ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி), ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத்திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம்.
இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும், இம்முகாமில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையினை சார்ந்த பல்வேறு தனியார்த்துறை நிறுவனங்களும் அதிக அளவில் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் பங்குக்கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் வரவேற்கப்படுகின்றனர்.இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.
வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. இம்முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் www.tnprivatejobs.tn.gov.in பதிவேற்றம் செய்யவேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்