- Home
- Business
- Gold Appraiser Training: தங்க நகையின் தரம்! போலியான நகைகளை அடையாளம் காண்பது எப்படி? தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Gold Appraiser Training: தங்க நகையின் தரம்! போலியான நகைகளை அடையாளம் காண்பது எப்படி? தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Tamilnadu Government: தமிழக அரசு, தொழில்முனைவோருக்காக சென்னையில் ஐந்து நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியை வழங்குகிறது. இப்பயிற்சியில் முடிவில் அரசு சான்றிதழுடன் வங்கிகளில் வேலைவாய்ப்புக்கான வழிகாட்டலும் வழங்கப்படும்.

தொழில்முனைவோரை உருவாக்கும் தமிழக அரசு
வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தமிழக அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பை உருவாக்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதாவது மீடியா ட்ரோன் பயிற்சி, பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பயிற்சி, யூடியூப் சேனல் தொடங்க பயிற்சி வழங்குகிறது. இந்நிலையில் தொழில்முனைவோர் ஐந்து நாட்கள் தங்க நகை மதிப்பீட்டாளர் தொடர்பான பயிற்சி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
அதில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி” ஜூன் 15 முதல் 19 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும்.
தங்கம், வெள்ளி தரம் அறிதல்
பயிற்சியின் போது தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு இணைப்பான், விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate),ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும், மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள், தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பு வழிகாட்டல்
* பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள், அவற்றை பெறும் நடைமுறைகள்.
* மத்திய / மாநில அரசுகள் அரசு கடனுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 9360221280 / 8668100181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

