- Home
- Business
- Paytm Bank: இந்த மூன்று காரணங்களால்.. பேடிஎம் வங்கியின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
Paytm Bank: இந்த மூன்று காரணங்களால்.. பேடிஎம் வங்கியின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
வாடிக்கையாளர் நலனுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவின்படி, பேடிஎம் வங்கி அனைத்து விதமான வங்கி வணிகத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.

நொய்டாவை தலைமையிடமாக கொண்டு பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி (RBI) ரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்: வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் எதிரான வகையில் வங்கியின் செயல்பாடுகள் மேற்கொள்ளபட்டதால் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகத்தின் பொதுநலனுக்கும் அதன் வைப்பாளர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அனைத்து வகையான வங்கி வணிகத்தையும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.
அதேநேரம், வங்கியின் கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்தத் தேவையான நிதி, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியில் பணம் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களின் நலனுக்கு எதிராக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செயல்பட்டதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1949-ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 22(4)-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய வேலை நாள் முடிவடையும்போது, இந்த உரிமம் ரத்து முழுமையாக அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 5(b)-யின்படி 'வங்கி' தொடர்பான எந்தவொரு வணிகத்தையும், பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற சேவைகளையும் இனி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியால் செய்ய முடியாது.
மேலும் வங்கியைக் கலைப்பதற்காக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை சமர்ப்பிக்க இருப்பதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, அப்படி வங்கியைக் கலைக்கும்போது, தனது முழு வைப்புத்தொகைப் பொறுப்பையும் திருப்பிச் செலுத்துவதற்குப் போதுமான பணப்புழக்கத்தை இந்த வங்கி கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், வாடிக்கையாளர் கணக்குகளில் புதிய டெபாசிட்டுகள், வாலட் டாப்பப்கள் மற்றும் கிரெடிட் பரிவர்த்தனைகளை செய்யத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடைகள் வங்கியின் வளர்ச்சியை முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

