ரூபாய் மாஸ் கம்பேக்… ஆர்பிஐ நடவடிக்கையால் ஒரே நாளில் பெரிய உயர்வு.!
வரலாற்று சரிவை சந்தித்த இந்திய ரூபாய், ரிசர்வ் வங்கியின் திடீர் நடவடிக்கையால் தற்போது வலுவான மீட்சியைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கை சந்தையில் டாலர் வரத்தை அதிகரித்து, ரூபாயின் மதிப்பை உயர்த்தியுள்ளது.

இந்திய ரூபாய் சமீபத்தில் கடுமையான சரிவை சந்தித்திருந்தாலும், தற்போது அதிரடியான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலைக்கு சரிந்த ரூபாய், அதற்குப் பிறகு மிக வேகமாக திரும்பி வந்துள்ளது. இதன் பின்னணி காரணமாக ரிசர்வ் வங்கியின் திடீர் நடவடிக்கை பார்க்கப்படுகிறது. இன்று வர்த்தகம் தொடங்கியவுடன், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சுமார் 1% உயர்ந்து 93.85 என்ற நிலையை எட்டியது. இதற்கு முன் வெள்ளிக்கிழமை, ரூபாய் 94.84 வரை வீழ்ந்திருந்தது.
அந்த நிலையில் ஒரே நாளில் சுமார் ஒரு ரூபாய் உயர்வு கண்டிருப்பது சந்தையில் பெரிய மாற்றமாக உள்ளது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ரிசர்வ் வங்கி எடுத்த புதிய கட்டுப்பாடுதான். அந்நியச் செலாவணி சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும், வங்கிகளின் ‘நெட் ஓப்பன் பொசிஷன்’ வரம்பை 100 மில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10க்குள் அனைத்து வங்கிகளும் இந்த விதியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டின் விளைவாக, வங்கிகள் அதிக அளவில் டாலரை கையிருப்பில் வைத்திருக்க முடியாது. இதனால் அவர்கள் வைத்திருந்த கூடுதல் டாலரை சந்தையில் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சந்தையில் டாலர் வரத்து அதிகரித்ததால், ரூபாயின் மதிப்பு தானாகவே உயர்ந்தது. இந்த நடவடிக்கை ரூபாய் மேலும் சரிவதை தடுக்க உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர். ‘ஓப்பன் பொசிஷன்’ என்பது ஒரு வங்கி வாங்கிய அல்லது விற்ற வெளிநாட்டு நாணயத்தை எதிர் பரிவர்த்தனை மூலம் முடிக்காமல் வைத்திருப்பதைக் குறிக்கும். நாள் முடிவில் வாங்கியதும் விற்றதும் இடையேயான வித்தியாசமே ‘நெட் ஓப்பன் பொசிஷன்’. இப்போது இந்த அளவை கட்டுப்படுத்தியதால், சந்தையில் சமநிலை ஏற்பட்டு ரூபாய்க்கு வலுவான ஆதரவு கிடைத்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

