- Home
- Business
- Indian Railways : ஸ்லீப்பர் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்.. RTI வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!
Indian Railways : ஸ்லீப்பர் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் மக்கள்.. RTI வெளியிட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்!
2025-26 நிதியாண்டில், வெயிட்டிங் லிஸ்டில் இருந்த டிக்கெட்டுகள் கன்பர்ம் ஆகாததால் சுமார் 3.39 கோடி பயணிகள் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை என்று ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. இதில் ஸ்லீப்பர் மற்றும் 3-ஏசி வகுப்பு பயணிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்
இந்தியாவில் ரயில் என்பது ஒரு சாதாரண போக்குவரத்து வசதி அல்ல. கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையின் நரம்பு. ஆனால், 2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே பயணிகள் எதிர்கொண்ட மிகப்பெரிய சிக்கல் தற்போது அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெயிட்டிங் லிஸ்டில் இருந்த டிக்கெட்டுகள் கன்பர்ம் ஆகாமல் தானாகவே ரத்து செய்யப்பட்டதால், சுமார் 3.39 கோடி பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், ஒவ்வொரு நொடியும் ஒருவர் ரயில் இருக்கை கிடைக்காமல் பயண வாய்ப்பை இழக்கிறார் என்ற அதிர்ச்சியான நிலை தெரியவந்துள்ளது.

ரயில் டிக்கெட் கன்பார்ம்
இந்த தகவலை RTI ஆர்வலர் சந்திரசேகர் கௌர் ரயில்வே துறையிடமிருந்து பெற்றுள்ளார். குறிப்பாக, சார்ட் தயாரான பிறகும் டிக்கெட் உறுதியாக இல்லாமல் போனதால், லட்சக்கணக்கான மக்களின் பயணத் திட்டங்கள் கடைசி நேரத்தில் சிதறியுள்ளன. இதில் ஸ்லீப்பர் மற்றும் 3-ஏசி வகுப்புகளில் பயணிக்க முடியாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
ரயில் பயணிகள் பிரச்சனை
இந்த புள்ளிவிவரங்களை கணக்கிட்டுப் பார்த்தால் பிரச்சனையின் தீவிரம் இன்னும் தெளிவாகிறது. ஒரு நாளுக்கு சராசரியாக 92 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரயில் பயணத்தை இழக்கின்றனர். ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3,870 பேர், ஒரு நிமிடத்திற்கு 64 பேர் என தொடர்ந்து பயண வாய்ப்புகள் கைவிடப்படுகின்றன. இந்த எண்கள் வெறும் தரவுகள் அல்ல; தேர்வு எழுத செல்ல முடியாத மாணவர்கள், வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்கள், சிகிச்சைக்கு தாமதமான நோயாளிகள், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத மக்கள் என பலரின் வாழ்க்கை கதைகள் இதன் பின்னால் உள்ளன.
ரயில் டிக்கெட் ரத்து
கடந்த சில ஆண்டுகளாக இந்த பிரச்சனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2021-22ல் 1.65 கோடியாக இருந்த பாதிப்பு, 2022-23ல் 2.72 கோடியாக உயர்ந்தது. அதன் பின்னர் 2023-24ல் 2.96 கோடி, 2024-25ல் 3.27 கோடி, தற்போது 2025-26ல் 3.39 கோடி என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதில் ஸ்லீப்பர் கிளாஸில் மட்டும் 1.68 கோடி பேர் பயணிக்க முடியாமல் போனது மிகப் பெரிய கவலையாக பார்க்கப்படுகிறது. குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு நகர மக்கள் போன்றவர்களே இதனால் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
ஸ்லீப்பர் கிளாஸ் பிரச்சனை
ரயில்வே துறை அதிவேக ரயில்கள், நவீன நிலையங்கள், புதிய திட்டங்கள் என எதிர்கால வளர்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய அடிப்படை தேவைகளே பூர்த்தியாகாமல் கேள்விகளை எழுப்புகின்றன. டிக்கெட் கிடைப்பது அதிர்ஷ்டமாக இல்லாமல், அடிப்படை உரிமையாக மாற வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை. கூடுதல் ரயில்கள், அதிக பெட்டிகள், மேம்பட்ட முன்பதிவு முறை மற்றும் பயணிகள் தேவைக்கேற்ப சேவைகள் விரிவுபடுத்தப்படாவிட்டால், இந்த பிரச்சனை இன்னும் மோசமடையும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

