- Home
- Business
- Bullet Train: சென்னை டூ பெங்களூரு இனி 2 மணி நேரம் தான்.. 350 கிமீ வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!
Bullet Train: சென்னை டூ பெங்களூரு இனி 2 மணி நேரம் தான்.. 350 கிமீ வேகத்தில் புல்லட் ரயில்.. சூப்பர் அப்டேட்!
Chennai-Bengaluru High-Speed Bullet Train: சென்னை டூ பெங்களூருவுக்கு 2 மணி நேரத்தில் செல்லும் வகையில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தென்னியாவில் அதிவேக புல்லட் ரயில்கள்
இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. நமது நாட்டில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்தியாவில் வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி போன்ற அதிவேக சொகுசு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
சென்னை, ஹைதராபாத், பெங்களூரு
இந்த நிலையில், தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் பிரம்மாண்டமான அதிவேக ரயில் (High-Speed Rail) வலையமைப்பை உருவாக்க மத்திய ரயில்வே அமைச்சகம் மற்றும் கர்நாடக அரசு இணைந்து திட்டப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் முக்கியமாக தென்னிந்தியாவின் பொருளாதார மையங்களான சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களை மிகக்குறைந்த நேரத்தில் இணைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
சென்னை டூ பெங்களூரு வெறும் 2 மணி நேரம் தான்
இந்த திட்டத்தின்படி பெங்களூரு - சென்னை வழித்தடமானது ஒயிட்ஃபீல்ட், கோலார் மற்றும் சித்தூர் வழியாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லப்போகும் ரயில்கள் மணிக்கு 250 முதல் 350 கி.மீ வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன. இந்த அதிவேக ரயில் வழித்தடங்கள் பாலங்களாகவே இருக்கும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதிவேக புல்லட் ரயில் திட்டம் வந்தால் சென்னையில் இருந்து சுமார் 320 கிமீ தொலைவு கொண்ட தொழில்நுட்ப நகரமான பெங்களூருவுக்கு வெறும் 2 மணி நேரத்தில் சென்று விட முடியும்.
சென்னை டூ ஹைதரபாத் பயண நேரமும் குறையும்
மேலும் இந்த திட்டம் முடிவடைந்தால் சென்னை டூ ஹைதரபாத், அமராவதி டூ ஹைதராபாத், பெங்களூரு டூ ஹைதராபாத் இடையே பயண நேரம் கணிசமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் வெறும் பயண நேரத்தைக் குறைப்பது மட்டுமின்றி தென்னிந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பையே மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சென்னை, பெங்களூரு, ஹைதாராபத், அமராவதி என 4 முக்கிய நகரங்களும் அதிவேக ரயில் பாதையில் இணைக்கப்படும்போது அவை ஒரே பொருளாதார மண்டலமாகச் செயல்படும்.
தென்னிந்திய மாநிலங்கள் வளர்ச்சியடையும்
இந்த வழித்தடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் மதிப்பு பல மடங்கு உயரும். மேலும் வேலைவாய்ப்புகளும் பன்மடங்கு பெருகும். பொதுவாக இந்தியாவில் வட இந்தியாவில் வந்தே பாரத் உள்ளிட்ட அதிவேக ரயில்கள் அதிகமாக இயங்குகின்றன. ஒப்பிட்டளவில் இந்த ரயில்கள் தென்னிந்தியாவில் குறைவு தான். இதனால் புல்லட் ரயில் திட்டம் தென்னிந்தியாவுக்கும் வந்தால் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா என 4 மாநிலங்களும் பொருளாதார வளர்ச்சியில் மேலும் வலுப்படும் என்பதில் ஐயமில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

