- Home
- Business
- Indian Railways : ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.. கன்ஃபர்ம் டிக்கெட் தேதி மாற்றம்.. ரத்து கட்டணம் இல்லை
Indian Railways : ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்.. கன்ஃபர்ம் டிக்கெட் தேதி மாற்றம்.. ரத்து கட்டணம் இல்லை
இந்திய ரயில்வேயின் பல தசாப்தங்கள் பழமையான பயணிகள் முன்பதிவு அமைப்பு இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பயண தேதியை மாற்றிக்கொள்ளும் வசதி, முன்பதிவு வேகத்தை அதிகரிப்பது போன்ற புதிய அம்சங்களை வழங்குகிறது.

ரயில் பயணிகளுக்கு புதிய வசதி
பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்ட பழைய பயணிகள் முன்பதிவு அமைப்பு (PRS) இப்போது முழுமையாக மேம்படுத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்படுகிறது. தினசரி கோடிக்கணக்கான பயணிகள் இந்த அமைப்பு, இனி வேகமாகவும் துல்லியமாகவும் செயல்படும் வகையில் மாற்றப்பட உள்ளது. இதன் மூலம் முன்பதிவு அனுபவமே புதிய பரிமாணத்தை எட்டும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

40 வருட பழைய PRS சிஸ்டம் ஓய்வு
1986-ஆம் ஆண்டு அறிமுகமான இந்த முன்பதிவு முறை, இடைப்பட்ட காலங்களில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப முழுமையான மாற்றம் அவசியமான நிலை ஏற்பட்டது. குறிப்பாக, ஆன்லைன் முன்பதிவின் அதிகரிப்பு இந்த அமைப்பின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியது. தற்போது நாட்டில் சுமார் 88 சதவீத டிக்கெட்டுகள் ஆன்லைன் வழியாக பதிவு செய்யப்படுகின்றன. இதனால் அதிக போக்குவரத்து நேரங்களில் சர்வர் மெதுவாக செயல்படுவது, பயணிகளுக்கு நேரடி தகவல் கிடைக்காதது போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன.
டிக்கெட் கன்ஃபர்மேஷன் கணிப்பு
இந்த சவால்களுக்கு தீர்வாக, புதிய AI அடிப்படையிலான முன்பதிவு முறைமை அறிமுகமாகிறது. இதில் மிக முக்கியமான அம்சம், ‘டிக்கெட் கன்ஃபர்மேஷன் கணிப்பு’ வசதி. முந்தைய முன்பதிவு தரவுகள் மற்றும் பயணப் பழக்க வழக்கங்களை அடிப்படையில் கொண்டு, வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் உறுதியாகும் வாய்ப்பை AI கணிக்கும். இந்த கனிப்பின் துல்லியம் 94 சதவீதம் வரை இருக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டிக்கெட் முன்பதிவு
மேலும், டிக்கெட் முன்பதிவின் வேகமும் அதிகரிக்கப்படுகிறது. தற்போதைய முறை ஒரு நிமிடத்தில் 25,000 டிக்கெட்டுகள் வரை பதிவு செய்யும் நிலையில், புதிய அமைப்பு 1.25 லட்சம் டிக்கெட்டுகளை பதிவு செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால் சர்வர் அழுத்தம் குறைந்து, டிக்கெட் மோசடிகள் மற்றும் சட்டவிரோத மென்பொருள் பயன்பாடுகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
ரயில் பயணத்தில் புதிய புரட்சி
பயணிகளுக்கான வசதிகளிலும் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்யாமல், பயண தேதியை மாற்றிக்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. அதற்காக ரத்து கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், தத்கால் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறைமை மூலம் பயணிகள் வேகமான சேவை, துல்லியமான தகவல் மற்றும் குறைந்த சிக்கல்களுடன் சுலபமான பயண அனுபவத்தைப் பெறுவார்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

