- Home
- Business
- இந்தியாவின் 5 மர்மமான ரயில் நிலையங்கள்.. இரவில் யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டாங்களாம்!
இந்தியாவின் 5 மர்மமான ரயில் நிலையங்கள்.. இரவில் யாரும் எட்டிக்கூட பார்க்க மாட்டாங்களாம்!
இந்தியாவில் மர்மமான 5 ரயில் நிலையங்கள் குறித்தும், இந்த ரயில் நிலையங்கள் தொடர்பாக பரப்பப்படும் அமானுஷயங்கள் குறித்தும் இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் மர்மமான ரயில் நிலையங்கள்
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்களில் ஒன்றாக உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் 24 மணி நேரமும் பிஸியாக உள்ளன. இந்தியாவில் பேய்க் கதைகள் அவிழ்த்து விடப்படும் மர்மமான ரயில் நிலையங்களும் இருக்கின்றன. அது குறித்து பார்க்கலாம்.
நைனி ரயில் நிலையம் (உத்தரப்பிரதேசம்)
கங்கை நதிக்கு அருகில் அமைந்துள்ள நைனி ரயில் நிலையம், அமானுஷ்ய நிகழ்வுகளின் மையமாக விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் விசித்திரமான உருவங்கள் தென்படுவதாகவும், காரணம் புரியாத சத்தங்கள் கேட்பதாகவும் பயணிகள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு செல்லவே பயம் வருவதாக சிலர் கூறுகின்றனர்.
சித்தூர் ரயில் நிலையம் (ஆந்திரப் பிரதேசம்)
தென்னிந்தியாவில் மர்மமாகப் பார்க்கப்படும் ரயில் நிலையங்களில் ஒன்று சித்தூர். இங்கு ரயில் விபத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் ஆவி நீதி கேட்டு அலறுவதாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இரவு நேரங்களில் ரயில்வே ஊழியர்கள் தனியாக இருக்கப் பயப்படும் அளவுக்கு அங்கு பல விசித்திரமான சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
பெகுன்கோடர் ரயில் நிலையம் (மேற்கு வங்கம்)
இந்தியாவின் மிகவும் பிரபலமான 'பேய்' ரயில் நிலையம் இதுதான். வெள்ளைச் சேலை அணிந்த ஒரு பெண் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிவதாகவும், இரவில் தண்டவாளத்தில் நடந்து செல்வதாகவும் உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர். இந்த கட்டுக்கதைகளுக்கு பயந்தே ரயில் ஊழியர்கள் பலர் இங்கு வேலை செய்ய மறுத்துள்ளனர். சுமார் 42 ஆண்டுகள் இந்த நிலையம் மூடப்பட்டிருந்தது. 2009-ல் மீண்டும் திறக்கப்பட்டாலும், சூரிய மறைவிற்குப் பிறகு அங்கு செல்ல இன்றும் மக்கள் தயங்குகிறார்கள்.
பரோக் ரயில் நிலையம் (இமாச்சலப் பிரதேசம்)
மலைகளுக்கு நடுவே அழகாகக் காட்சியளிக்கும் இந்த நிலையம், சோகமான பின்னணியைக் கொண்டது. இந்த நிலையத்தைக் கட்டிய பொறியாளர் கர்னல் பரோக், கட்டுமானப் பணியில் ஏற்பட்ட தவறால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது ஆவி இன்னும் சுரங்கப்பாதைக்கு அருகில் உலவி வருவதாக உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்.
லூதியானா ரயில் நிலையம் (பஞ்சாப்)
பஞ்சாபில் உள்ள லூதியானா ரயில் நிலைய நடைமேடையில் சோகமாக இறந்த ஒரு பெண்ணின் ஆவி நடமாடுவதாக வதந்தி பரவுகிறது. நள்ளிரவு நேரங்களில் அங்கிருந்து கேட்கும் பயங்கரமான அலறல் சத்தங்களும், திடீரென மறைந்து போகும் உருவங்களும் பயணிகளையும் ஊழியர்களையும் இன்றும் அச்சத்தில் ஆழ்த்துகின்றன. இதனால் இரவில் ரயில் நிலையத்துக்கு செல்லவே மக்கள் பயப்படுகின்றனராம்.
குறிப்பு: மேற்கண்ட இந்த ரயில் நிலையங்களில் பேய், ஆவி உலவுவதாக கூறுவதே அங்குள்ள உள்ளூர் மக்களின் நம்பிக்கை மட்டும் தான். இவை ஏதும் அறிவியல்ரீதியாக நிரூப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.
