- Home
- Business
- Union Budget 2026: டோட்டலாக மாறப்போகும் இந்திய ராணுவம்.. நிதியை வாரி வழங்கிய மத்திய அரசு!
Union Budget 2026: டோட்டலாக மாறப்போகும் இந்திய ராணுவம்.. நிதியை வாரி வழங்கிய மத்திய அரசு!
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த பட்ஜெட்டை விட 20 சதவீதம் அதிக நிதி உயர்வை விரும்பியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 26 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புச் செலவு 40 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன
மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்டில் 2026-27 நிதியாண்டிற்காக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு மத்திய அரசு ரூ.7.8 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. மூலதன செலவின பட்ஜெட்டின் கீழ் நவீனமயமாக்கலுக்காக பாதுகாப்புப் படைகளுக்கு ரூ.2.19 லட்சம் கோடி கிடைக்கும். 2026-27 நிதியாண்டில், மூலதனச் செலவினம் 2025-26 நிதியாண்டில் இருந்த ரூ.1.80 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.19 லட்சம் கோடியாக 21.84 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?
ஆயுதப் படைகளுக்காக ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டு ரூ.6.22 லட்சம் கோடியிலிருந்து 9.2 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 15 சதவீதம் அதிகரிக்கும். ரஃபேல் போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் போன்ற முக்கிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளன.
பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடும் உயர்வு
பாதுகாப்பு பட்ஜெட் (சிவில்) கடந்த ஆண்டின் ரூ.28,554.61 கோடியுடன் ஒப்பிடும்போது 0.45 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) மற்றும் மூலதனச் செலவினங்களுக்கு முறையே ரூ.3,65,478.98 கோடி மற்றும் ரூ.2,19,306.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,.
இது 17.24 சதவீதம் மற்றும் 21.84 சதவீதம் உயர்வை காட்டுகிறது. பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கான ஒதுக்கீடும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு இதற்காக ரூ.1,71,338.22 கோடியை ஒதுக்கியுள்ளது.
நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பாதுகாப்புத் துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்ட நிர்மலா சீதாராமன், "பாதுகாப்புத் துறையில் உள்ள பிரிவுகளால் பராமரிப்பு, பழுதுபார்ப்பு அல்லது ஒட்டுமொத்த தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் விமானங்களின் பாகங்கள் தயாரிப்பிற்காக இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிதி
1971ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையாயான போருக்கு பிறகே மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தான் உடனான மோதல் ஆகியவற்றுக்கு பிறகு பாதுகாப்புத் துறைக்கு இந்த பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கெனவே எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
உள்நாட்டு தயாரிப்பில் முன்னுரிமை
மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த பட்ஜெட்டை விட 20 சதவீதம் அதிக நிதி உயர்வை விரும்பியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 26 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புச் செலவு 40 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் தான் மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு தயாரிப்பை தொடர்ந்து ஊக்குவித்து செயல்படுத்தி வருகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

