வெனிசுலாவில் பட்டையை கிளப்பும் இந்தியன் பிராண்ட் பைக்குகள் எவை தெரியுமா?
வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி, அங்கு இருசக்கர வாகன ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாகன ஏற்றுமதி
வெனிசுலாவில் அமெரிக்க ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. துணை அதிபர் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் நிலைத்தன்மை மற்றும் பொருளாதார அழுத்தம் வெனிசுலாவை கடுமையாக தாக்குகிறது. பெரும்பாலான அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நாடாக இருப்பதால், இந்த நெருக்கடி பொதுமக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், இந்தியாவுடன் உள்ள வணிக உறவுகள் குறித்தும் கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக வெனிசுல இருந்து வருகிறது. குறிப்பாக, பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் மற்றும் பாக்ஸர் போன்ற இருசக்கர வாகனங்கள் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இருப்பினும், வெனிசுலாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும், பஜாஜ் ஆட்டோவின் மொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாக நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. வெனிசுலா சந்தை முக்கியமானதாக இருந்தாலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் அதன் பங்கு குறைவு என்பதே பஜாஜின் நிலைப்பாடு.
பஜாஜ் ஆட்டோ ஏற்றுமதி
பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் ஷர்மா வெளியிட்ட தகவலின்படி, மதுரோவின் கைது நிறுவனங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2026 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பஜாஜ் ஆட்டோ 16.39 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட சுமார் 19 சதவீதம் அதிகம் என்பதால், நிறுவனத்தின் ஏற்றுமதி வளர்ச்சி வலுவாக உள்ளது.
ஒருகாலத்தில், குறிப்பாக 1990கள் வரை, வெனிசுலாவின் ஆட்டோமொபைல் துறை வலுவாக செயல்பட்டது. ஆனால் 2000களில் ஏற்பட்ட பொருளாதார சரிவு, கடும் பணவீக்கம் மற்றும் உதிரிபாகங்கள் பற்றாக்குறை காரணமாக அந்தத் துறை வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்போர்டு போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை மூடின. தற்போது, வெனிசுலா பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து வசதிகள் பலவீனமாக இருப்பதால், தனியார் வாகனங்களுக்கு அங்கு தொடர்ந்து தேவை இருந்து வருகிறது.

