போதை மாத்திரைக்காக தகராறு… இளைஞர் வெட்டி கொலை… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!
சென்னையில் போதை மாத்திரைக்காக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னையில் போதை மாத்திரைக்காக ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை கொருக்குப்பேட்டை அரிநாராயணபுரம் பகுதியில் வசித்து வரும் ராகுல் என்ற 19 வயது வாலிபர் கூலி வேலை செய்து வந்தார். இவரது தந்தை ராம்குமார் உயிரிழந்துவிட்ட நிலையில் தாய் பானுவுடன் ராகுல் வசித்து வந்தார். இவர் நேற்றைய முன்தினம் இரவு அரிநாராயணபுரம் பகுதியில் ராகுலை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் தலை, முதுகு, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ராகுல் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். ராகுலை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதை அடுத்து உயிருக்கு போராடிய ராகுல் மீட்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த ஆர்.கே.நகர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது போதை மாத்திரை விற்பனை தகாராறில் ராகுல் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ராகுல் கூலி வேலை செய்து கொண்டே இளம் வயதிலேயே போதை மாத்திரைகளையும் வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த போதை மாத்திரைகளை வாங்குவதற்காக கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த கவுரி சங்கர், தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்த சரவணன், பென்சில் பேக்டரியை சேர்ந்த ரகுமான் ஆகிய 3 பேரும் ராகுலிடம் ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும் ஆனால் ராகுல் பணம் வாங்கிக்கொண்டு போதை மாத்திரைகளை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது.
இதன் காரணமாகவே ராகுலுக்கும், பணம் கொடுத்து ஏமாந்த 3 பேருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதையடுத்து ரூ.20 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு போதை மாத்திரைகளை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிய ராகுலை நேற்று இரவு கொருக்குப்பேட்டை நாராயணபுரம் பகுதியில் வைத்து சங்கர், சரவணன், ரகுமான் ஆகிய 3 பேரும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதை அடுத்து தப்பி ஓடிய சங்கர், சரவணன், ரகுமான் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்கள் ராகுல் கொலை தொடர்பாக வாக்குமூலமும் அளித்துள்ளனர். இதையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ராகுல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.