மயிலாடுதுறை அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இருக்கிறது கோமல் கொழையூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சுரேஷ்மேனன்(21). சுற்று வட்டார பகுதிகளில் நடக்கும் கட்டிட பணிகளில் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சுரேஷின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் திருமண விழா ஒன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சுரேஷ் வசிக்கும் தெருவில் பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 9 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். திருமண விழாவில் சிறுமியும் தனது பெற்றோருடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது விளையாடிக்கொண்டிருந்த சிறுமியுடன் சுரேஷ் பேச்சு கொடுத்துள்ளார். பின் அவரை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அழுதுகொண்டே பெற்றோரிடம் சென்றுள்ளார்.

சிறுமியிடம் அவர்கள் விசாரித்த போது நடந்தவற்றை கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் உறவினர்களுடன் சேர்ந்து சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அவர் மீது மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் சுரேஷை அதிரடியாக கைது செய்தனர். போக்சோவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இளைஞர் ஒருவர் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: 'கழகத்தை காக்க வா.. தலைவா'..! அழகிரி பிறந்தநாளில் அதிரும் மதுரை..!