திருநெல்வேலி அருகே சொத்துக்களுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே இருக்கும் பெருமாள்புரத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி வெள்ளையம்மாள். கணவர் இறந்து விட்ட பிறகு வெள்ளையம்மாள் மட்டும் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். அவரை இருள் அம்மாள் என்கிற பணிப்பெண் கவனித்து வந்திருக்கிறார். வெள்ளையம்மாளின் உறவினர்கள் தேவராஜன் அவரது மகன் பிரகாஷ். இவர்கள் இருவரும் தான் வெள்ளையம்மாளை கடந்த சில வருடங்களாக பராமரித்து வந்திருக்கின்றனர். வெள்ளையம்மாளுக்கு ஏராளமான சொத்துக்கள் இருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளையம்மாளிடம் தேவராஜன் பணம் கேட்டிருக்கிறார். ஆனால் பணம் கொடுக்க வெள்ளையம்மாள் மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தகராறு முற்றி ஆத்திரமடைந்த தேவராஜன் மற்றும் அவரது மகன் ஜான் பிரகாஷ் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து மூதாட்டியின் வாயில் ஊற்றி கொடூரமாக கொலை செய்திருக்கின்றனர்.

ஆனால் வயது முதிர்வு காரணமாக வெள்ளையம்மாள் இயற்கையாக இறந்ததாக உறவினர்களிடம் கூறியிருக்கின்றனர். எனினும் அதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி வெள்ளையம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே தேவராஜனின் மகன் ஜான் பிரகாஷ் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று இருக்கிறார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் தேவராஜன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.