தினமும் குடித்து விட்டு வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வாணியுடன் ரமேஷ் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
சென்னையில் மனைவியை கொடூரமாக கொலை செய்து வீட்டுக்குள் அடைத்து வைத்து விட்டு கணவர் தப்பி சென்ற சம்பவம் ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரம் 4-வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வாணி(41). இவர் சென்ட்ரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையில் வீட்டு வேலை செய்து வருகிறார். தினமும் குடித்து விட்டு வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் வாணியுடன் ரமேஷ் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரமேஷ் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், யாருக்கும் தெரியாமல் கை-கால்களை கட்டி உடலை மூட்டை கட்டினார்.

இதன் பிறகு அந்த மூட்டையை வீட்டில் உள்ள பெரிய மேஜைக்கு அடியில் தள்ளி மறைத்து வைத்தார். மனைவியை கொலை செய்வதற்கு முன்பாக தனது மகன்கள் கவுதம் (15), ஹரீஷ் (12) ஆகிய இருவரையும் ரமேஷ் திட்டமிட்டு தனது மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் பின்னர் மனைவியை கொலை செய்து விட்டு அவர் தலைமறைவாகி விட்டார். பாட்டி வீட்டில் இருந்த கவுதம், ஹரீஷ் இருவரும் நேற்று இரவு வீடு திரும்பினார்கள். கொலை செய்யப்பட்டு தாயின் உடல் வீட்டுக்குள் இருப்பது தெரியாமல் இருவரும் விளையாடி விட்டு வீட்டிலேயே தூங்கினர்.

மறுநாள் காலையில் அதிகளவு துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம் பக்கத்தில் சென்று தெரிவித்தனர். அருகில் இருந்தவர்கள் வீட்டுக்குள் சென்று துர்நாற்றம் வீசிய இடத்தை பார்த்தனர். அப்போது மேஜைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூட்டை பிரிந்து பார்த்த போது வாணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவரை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
