சரண்யாவின் அண்ணன் சக்திவேல், தங்கையிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எங்களுக்கு தெரியாமல் நீ திருமணம் செய்து கொண்டு விட்டாய். நடந்தது, நடந்ததாக இருக்கட்டும். உங்களுக்கு நாங்கள் விருந்து வைக்க வேண்டும். எனவே நீங்கள் இருவரும் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார்.
கும்பகோணம் அருகே புதுமண தம்பதியை வெட்டிக்கொன்றது ஏன் என்பது பற்றி கைதான பெண்ணின் அண்ணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
காதல் திருமணம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் அடுத்த விளந்தகண்டம் அய்யா காலனியை சேர்ந்தவர் சேகர். கொத்தனார். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 3 மகன்கள், சரண்யா(25) என்ற மகள். சரண்யா நர்சிங் படித்துவிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் உறவினரான ரஞ்சித்குமார் என்பவருக்கும் திருமணம் செய்வதற்கு வீட்டில் முடிவு செய்துள்ளனர். சரண்யா ஏற்கனவே மோகன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

பெற்றோர் அதிர்ச்சி
இந்த காதல் விவகாரம் சரண்யாவின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலை சரண்யாவின் குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து சரண்யாவை, அவரது அண்ணன் சக்திவேலின்(31) மைத்துனர் ரஞ்சித்துக்கு(28) திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதனால் பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவலறிந்த சரண்யாவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

வாசலில் வைத்து புதுமண தம்பதி கொலை
இந்நிலையில், சரண்யாவின் அண்ணன் சக்திவேல், தங்கையிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எங்களுக்கு தெரியாமல் நீ திருமணம் செய்து கொண்டு விட்டாய். நடந்தது, நடந்ததாக இருக்கட்டும். உங்களுக்கு நாங்கள் விருந்து வைக்க வேண்டும். எனவே நீங்கள் இருவரும் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பி புதுமண தம்பதி சென்னையில் இருந்து சோழபுரம் துலுக்கவேலியில் உள்ள சரண்யாவின் வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வீட்டு வாசலில் வைத்து புதுமண தம்பதியை சரமாரியாக வெட்டினர். இதில் அதே இடத்தில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்
இந்த இரட்டைக் கொலை குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், ரஞ்சித்தை கைது செய்தனர். விசாரணையில் சக்திவேல் அளித்த வாக்குமூலத்தில் சரண்யாவின் காதல் திருமணம் எங்களுக்கு பிடிக்காததால் அவர்களை தீர்த்து கட்ட நானும், ரஞ்சித்தும் சேர்ந்து முடிவு செய்தோம். அவர்களை விருந்துக்கு அழைப்பதுபோல் வரவழைத்து தீர்த்து கட்டினோம் என கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் போலீசார் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
