தூத்துக்குடியில் பயங்கரம்.. அதிமுகவை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டி படுகொலை..!
தூத்துக்குடி மாவட்டம், ஏரலை அடுத்த அகரம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் பொன்சீலன் (45). அதிமுக பிரமுகரான இவர், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துக்களின் கூட்டமைப்பு தலைவராகவும் உள்ளார்.
தூத்துக்குடி அருகே அதிமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலை அடுத்த அகரம் கிராம பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் பொன்சீலன் (45). அதிமுக பிரமுகரான இவர், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 31 பஞ்சாயத்துக்களின் கூட்டமைப்பு தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி எஸ்தர் மெர்லின். 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் முத்தையாபுரம் வீரபாண்டிய நகரில் வசித்துள்ளார். அகரத்தில் நேற்று 2வது நாளாக நடந்த கொடை விழாவில் கலந்து கொண்டதோடு, பஞ்சாயத்து துணைத் தலைவர் தவசிக்கனி என்பவரது வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு காரில் 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் வீட்டின் மேல் ஏறி ஓடுகளை உடைத்து கம்பு, கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே குதித்தனர். பின்னர் அந்த கும்பல் பொன்சீலனை சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பொன்சீலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது.
இதந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொன்சீலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பஞ்சாயத்து தலைவரை கொலை செய்தது அகரம் பகுதியை சேர்ந்த ஜெபாசிங் (38), ரூபன் (48), ஜெகன் (42), ஜெபாஸ்டின் ஆகிய 4 பேர் என்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் கூறுகையில்; கடந்த 2017-ம் ஆண்டு அகரம் பகுதியை சேர்ந்த லெனின் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்சீலன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதன் தீர்ப்பு நாளை வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக பொன்சீலனுக்கும், லெனினின் உறவினர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது.
தற்போது போலீசார் தேடும் ரூபன் மற்றும் ஜெகன் ஆகியோர் ஏற்கனவே 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட லெனினின் உடன் பிறந்த சகோதரர்கள் ஆவர். எனவே அந்த கொலைக்கு பழிக்கு பழியாகவே பொன் சீலன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலையில் ஈடுபட்ட ஜெபாஸ்டின் தற்போது நடந்து முடிந்த தூத்துக்குடி, நாசரேத் திருமண்டல தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை. பொன்சீலன் வெற்றி பெற்று விட்டார். எனவே இந்த தேர்தல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.