தூத்துக்குடி அருகே வேலையை விட்டு விலகிய அசாம் மாநில தம்பதியை, அவர்களை வேலைக்குச் சேர்த்த ஏஜென்ட் மற்றும் இருவர் காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்றனர். அங்கு கணவரைத் தாக்கி, அவர் கண்முன்னே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அரசர்குளத்தில் உள்ள தனியார் ஹாலோபிளாக் கம்பெனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கணவன், மனைவி வேலைக்குச் சேர்ந்துள்ளனர். நெல்லையில் வசித்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹூசைன் என்பவர் ஹாலோபிளாக் கம்பெனி உரிமையாளரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு இவர்களை வேலைக்குச் சேர்த்துள்ளார். ஆனால் அந்த கம்பெனியில் போதிய அடிப்படை வசதி இல்லாததாலும், சம்பளம் போதாது என்பதாலும் அவர்கள் இருவரும் வேலையிலிருந்து விலகுவதாக கூறியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பின்னர், இருவரும் கேரள மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் இருவரும் நெல்லைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் ஹூசைன், அரசர்குளத்திலேயே வேலை செய்யுமாறு மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கூறிய அவர், பைக்கில் அசாமைச் சேர்ந்த 2 இளம் சிறார்களுடன் சிவந்திப்பட்டி பகுதியில் நின்றுள்ளார். ஆட்டோ அங்கு வந்ததும் தம்பதி, கல் குவாரியில் இருந்து பணத்தை திருடி விட்டதாக டிரைவரிடம் கூறி இருவரையும் இறக்கி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பெண்ணின் கணவரை மூவரும் சரமாரியாக தாக்கி விட்டு அவர் கண் முன்னே அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பல மணி நேரத்திற்கு பின் இருவரையும் மெயின் ரோட்டுக்கு கொண்டு வந்து விட்டு விட்டு தப்பிவிட்டனர். பாதிக்கப்பட்ட அந்த பெண், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முகமது மஹ்புல் ஹூசைன் மற்றும் 2 அசாமைச் சேர்ந்த இளம் சிறார்களையும் போலீசார் கைது செய்து ஹூசைனை பாளையங்கோட்டை சிறையிலும், இளம் சிறார்களை சிறுவர் கூர் நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.