பிரபல தொழிலதிபர் வீட்டில் கொள்ளை..! 100 சவரன் நகை அபேஸ்..!
கோவை தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சிங்காநல்லுர் அருகே இருக்கிறது மசக்காளிபாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஆதம்ஷா. பிரபல தொழிலதிபரான இவர் கோவை பட்டினம் பகுதியில் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி அருகே இருக்கிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் தூத்துக்குடி சென்றுள்ளார்.
பின் மீண்டும் நேற்று இரவு கோவை திரும்பிய ஆதம்ஷா வீட்டிற்கு சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் சிலர் புகுந்துள்ளனர். அவர்கள் வீட்டின் பீரோவையும் உடைத்து அதிலிருந்த 100 சவரன் நகை மற்றும் பத்து லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றிருக்கின்றனர். நகை மற்றும் பணம் கொள்ளை போயிருந்தது கண்டு செய்வதறியாது திகைத்த ஆதம்ஷா காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கும் கோவை சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை மர்ம நபர்கள் சிலர் சரியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆதம்ஷா வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததும் கொள்ளையர்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை வைத்து காவலர்கள் விசாரணையை துரித படுத்தியுள்ளனர்.
Also Read: 11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!