டிவியில் சத்தமாக பாட்டு கேட்ட சித்தியை சதக் சதக் என குத்திய வாலிபர்!
டிவியில் அதிக சத்தமாக பாட்டு கேட்டு கொண்டிருந்த சித்தியை, கத்தியால் சரமாரியாக குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
டிவியில் அதிக சத்தமாக பாட்டு கேட்டு கொண்டிருந்த சித்தியை, கத்தியால் சரமாரியாக குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை வடக்கு பார்வதிபுரம் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமு. பெயிண்டர். இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் ராமு, லட்சுமி (36) என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார்.
ராமுவின் முதல் மனைவிக்கு ராஜேஷ் உள்பட 3 மகன்கள் உள்ளனர். லட்சுமிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் ஒரேவீட்டில் வசிக்கின்றனர். ராஜேஷ் ஐடிஐ. படித்து விட்டு வேலை தேடி வருகிறார். லட்சுமி தனியார் பள்ளியில் உதவியாளராக வேலைசெய்கிறார்.
இந்நிலையில் நேற்று காலை ராஜேஷ், வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது வந்த ஒரு பாடலுக்கு, அதிக சத்தம் வைத்துள்ளார்.
அந்த நேரத்தில் லட்சுமி செல்போனில் அழைப்பு வந்தது. டிவி சத்தம் அதிகமாக இருந்ததால், அவரால், எதிர் முனையில் பேசியது கேட்கமுடியவில்லை. இதனால், டிவி சத்தத்தை குறைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் ராஜேஷ், அதை காதில் வாங்காமல் படுத்து கொண்டிருந்தார்.
இதனால் விரக்தியடைந்த லட்சுமி, ரஜேஷை மிரட்டுவதற்காக, போலீசில் புகார் செய்வேன் என கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியின் வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிவிட்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த லட்சுமியை மீட்டு, புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனயில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புகாரின்படி கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ராஜேஷை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.