கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண், தற்போது சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம் அரியூர்நாடு ஊராட்சியில் உள்ள பரவாத்தம்பட்டியை சேர்ந்தவர் பங்காரு. இவர் விவசாயியாக இருக்கிறார். இவருடைய மனைவி பெயர் அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ரேணுகா என்ற மகள் இருந்தார். இவருக்கு வயது 21 ஆகும். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் இருந்த ரேணுகா திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்தநிலையில் நேற்று காலை பங்காருவின் விவசாய நிலத்துக்கு அருகே புதரில் எலும்பு கூடு ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கொல்லிமலை வாழவந்திநாடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் ரேணுகாவின் பெற்றோரும் அங்கு வந்தனர். அவர்கள் எலும்பு கூட்டின் அருகே கிடந்த சட்டை, பாவாடை மற்றும் தோடு ஆகியவற்றை பார்த்து, அது காணாமல் போன தங்களது மகள் என்பதை உறுதி செய்தனர். பின்னர் அவர்கள் கதறி அழுதனர்.

போலீசார் எலும்பு கூடை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ரேணுகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து புதரில் வீசி சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லிமலையில் 1½ ஆண்டுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண் எலும்பு கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.