பத்தாம் வகுப்பு மாணவிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பள்ளி மாணவி தான் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு சென்று 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை எழுதினார்.
குழந்தை திருமணத்தால் பாதிப்பு
குழந்தை திருமணத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருந்த போதும் தெரிந்தும் தெரியாமலும் ஏராளமான குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. சிறு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதால் பெண்கள் மன ரீதியாக பாதிக்கப்படும் நிலை உள்ளதால் பெண்களின் திருமண வயது 18 என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் 14 வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் கொடுமை பல இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னையில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடைபெற இருந்த திருமணம் குழந்தைகள் நல அதிகாரிகளால் நிறுத்தப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
சென்னை வடபழனியில் சிறுமி ஒருவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வந்த புகாரையடுத்து இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தினர் அரும்பாக்கம் காவல்நிலையத்தில் முறையிட்டனர். இதனையடுத்து போலீஸ் துணையோடு வடபழனியில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்ற குழுவினர் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியின் பிறப்பு சான்றிதழை சோதனை செய்ததில், திருமண பெண்ணிற்கான வயது இல்லையென்றும் குறைந்த வயது இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், மணமகன் ராயப்பன், மற்றும் சிறுமியின் பெற்றோர் புருஷோத்தமன், பொன்மணியிடம் அறிவுரை வழங்கினர். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட 18 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு முன் திருமணம் செய்தால் சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தனர்.

பள்ளிக்கு சென்று தேர்வெழுத்திய மாணவி
இதனையடுத்து குழந்தைகள் நல குழுவினரிடம் மணப்பெண்ணாக இருந்த சிறுமி பள்ளிக்கு சென்று தேர்வெழுத வேண்டும் என தனது விருப்பதை கூறினார். இதனையடுத்து தனது அலங்கார உடையை மாற்றி பள்ளி சீருடையுடன் சென்று 10 ஆம் வகுப்பிற்கான தமிழ் பாட தேர்வை பள்ளி மாணவி எழுதினார். குக் கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெறும் என கேள்விப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே குழந்தை திருமணம் நடைபெற இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
