உத்தரபிரதேசத்தில் 2 வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம், பிரயாக்நகர் மாவட்டத்தில் உள்ளது கவாஜ்பூர் பகுதி. இங்குள்ள ஒரு வீட்டில் இருந்து இன்று காலை அதிக அளவில் புகை வெளிக்கொண்டிருந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள், தீயை அணைத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்போது அங்கு ஒரு குடும்பமே ரத்த வெள்ளத்தில் மிதந்துக் கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்று போலீஸார் சோதனை செய்ததில் அந்த வீட்டின் உரிமையாளர் ராம்குமார் யாதவ் (55), அவரது மனைவி கசம் தேவி (52), அவர்களின் மகள் மனீஷா (25), மருமகள் சவீதா (27), சவீதாவின் குழந்தை மீனாட்சி (2) ஆகியோர் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களின் உடல்களை கைப்பற்றி போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராம்குமார் யாதவின் மகன் சுனில் வீட்டில் இல்லாததால் அவர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். சுனிலிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கிறதா அல்லது சொத்து தகராறு காரணமாக யாரேனும் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : நேற்று ஸ்டாலின்..இன்று அண்ணாமலை.! அமித்ஷாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை !